பதிவு செய்த நாள்
26 டிச2012
00:29
மும்பை:அன்னிய நிதி நிறுவனங்கள், சாதனை அளவாக, நடப்பு டிசம்பர் 21ம் தேதி நிலவரப்படி 1.22 லட்சம் கோடி ரூபாயை (2,300 கோடி டாலர்), இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளன.இது, சென்ற 2011ம் ஆண்டு, இதே காலத்தில், மிக குறைந்த அளவாக, 18,380 கோடி ரூபாயாக (340 கோடி டாலர்) இருந்தது.
கடந்த 2010ம் ஆண்டுக்கு பிறகு, நடப்பு 2012ம் ஆண்டில் தான், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச்சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன.நடப்பு டிசம்பரில், அன்னிய நிதி நிறுவனங்கள், 57,023 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன. அதே சமயம், 38,644 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்கள், பங்குச் சந்தைகளில், 18,380 கோடி ரூபாய் நிகர முதலீடு மேற்கொண்டுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் 1.33 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நிகர முதலீடு மேற்கொண்டன. அதே சமயம், சென்ற 2011ம் ஆண்டில், இந்நிறுவனங்கள், நிகர அளவில் 2,714 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன. நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரை, 1.22 கோடி ரூபாய் அளவிற்கு, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு மேற்கொண்டுள்ளன.
இது, கடந்த 2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை, மேற்கொள்ளப்பட்ட 1.61 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுடன் ஒப்பிடும்போது, 24 சதவீதம் குறைவு.அதேபோன்று, நடப்பாண்டில் சென்ற 21ம் தேதி நிலவரப் படி, பதிவு செய்து கொண்ட அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 1,755 ஆக குறைந்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டில் 1,767 ஆக இருந்தது. 2010ம் ஆண்டு 1,718 ஆக மிகவும் குறைந்து காணப்பட்டது. அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தவரை, சென்ற அக்டோபர் மாதம் வரையில், 194 கோடி டாலர் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, 67 சதவீத வளர்ச்சியாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|