பதிவு செய்த நாள்
30 டிச2012
23:42
புதுடில்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐ.ஏ.ஆர்.ஐ), சோதனை அடிப்படையில் உருவாக்கிய, புதிய "புசா-1509' பாசுமதி நெல் சாகுபடி பெரும் வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து, வரும் ஆண்டின் கரீப் பருவத்தில், இவ்வகை பாசுமதி நெல் அதிக பரப்பளவில் பயிரிடப்பட உள்ளது.புதிய பாசுமதி நெல்இதனால், பாசுமதி அரிசி உற்பத்தி அதிகரிக்கும் என்பதுடன், ஏற்றுமதியும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில், தற்போது "புசா-1121' பாசுமதி நெல் பயிரிடப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில், இவ்வகை பாசுமதி அரிசிக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில், இதன் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.எனினும், இதன் சாகுபடி காலம், தேவைப்படும் பாசன வசதி ஆகியவற்றை குறைத்து, தரத்தை அதிகரிக்கும் முயற்சியை இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் மேற்கொண்டது.கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, தற்போது வெற்றி பெற்றுள்ளது.தற்போதுள்ள "புசா-1121' பாசுமதி நெல்லின் முதிர்வுக் காலம், 145 -155 நாட்கள் என்ற அளவில் உள்ளது. ஒரு ஹெக்டேரில், 4.5 டன் பாசுமதி நெல் உற்பத்தியாகிறது.அதே சமயம், வேளாண் விஞ்ஞானிகள், பஞ்சாபில், சோதனை அடிப்படையில் மேற்கொண்ட, "புசா-1509' பாசுமதி நெல்லின் முதிர்வுக் காலம், 125 நாட்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. மேலும், ஒரு ஹெக்டேருக்கு 6.5 டன் என்ற அளவில் விளைச்சல் உள்ளது. இத்துடன், இந்த நெல்லின் தரமும், உயர்வாக உள்ளது.இதனால், இவ்வகை நெல் பயிரிடும் விவசாயிகள், குறைந்த பாசன வசதியில், கூடுதலான மகசூலை பெறவும், அதிக வருவாய் ஈட்டவும் வழி பிறந்துள்ளது.அடுத்த ஆண்டு கரீப் பருவத்தில், இவ்வகை நெல் விதைகளை நாடு தழுவிய அளவில் அறிமுகப்படுத்த, ஐ.ஏ.ஆர்.ஐ., திட்டமிட்டுள்ளது. குறுகிய கால பயிர் என்பதாலும், வெளிநாடுகளில் இந்திய பாசுமதி அரிசிக்கான தேவை அதிகரித்து வருவதாலும், "புசா-1509' பாசுமதி அரிசி பெரும் வரவேற்பை பெறும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சவுதி அரேபியாதற்போதுள்ள "புசா-1121' பாசுமதி நெல், கடந்த 2003 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில், 26 லட்சம் ஹெக்டேரில், பாசுமதி நெல் வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில், "புசா-1121' நெல், 15 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் பயிரிடப்படுகிறது.இந்த வகை பாசுமதி அரிசிக்கு, ஈரான், சவுதி அரேபியா போன்ற, மேற்காசிய நாடுகளில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.இதனால் இதன் ஏற்றுமதி, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2006-07ம் ஆண்டு, நாட்டின் பாசுமதி அரிசி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2,792 கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 15,450 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு 2012-13ம் நிதியாண்டில், இது, 16 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் ஆண்டில், புதிய பாசுமதி அரிசி உற்பத்தி பரவலாகும் பட்சத்தில், ஒட்டுமொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டும் என, தெரிகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|