பதிவு செய்த நாள்
03 ஜன2013
02:22
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்றும் மிகவும் நன்கு இருந்தது. அமெரிக்காவின் நிதி பெருக்க திட்டங்களுக்கு, பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. "சென்செக்ஸ்', 0.68 சதவீதமும், "நிப்டி', 5,900 புள்ளிகளை தாண்டியும் முடிவடைந்தன.
மேலும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சிறப்பாக இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. இருப்பினும், நுகர்பொருட்கள், தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 133.43 புள்ளிகள் அதிகரித்து, 19,714.24 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,756.68 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,686.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பஜாஜ் ஆட்டோ, மாருதி, ஸ்டெர்லைட் உள்ளிட்ட, 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், விப்ரோ, ஐ.டி.சி., இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 42.40 புள்ளிகள் உயர்ந்து, 5,993.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,006.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,982 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|