பதிவு செய்த நாள்
05 ஜன2013
00:39
புதுடில்லி:நாட்டின் பல்வேறு மாநிலங்களில், சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதாலும், வேளாண் உற்பத்திக்கு ஏற்ற சாதகமான தட்பவெப்பம் நிலவுவதாலும், வரும் மாதங்களில், காய்கறி மற்றும் சமையல் எண்ணெய் விலை படிப்படியாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
உருளைக்கிழங்கு:சென்ற செப்டம்பர் மாதம் முதல், காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது.எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின் மார்ச் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 91 சதவீதம் அதிகரித்து காணப்பட்ட உருளைக்கிழங்கின் விலை, தற்போது, சரிவடைந்துள்ளது.மொத்த விலை கடைகளில், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை, 3.60 - 4.20 ரூபாயாக உள்ளது.
இது, சில்லரையில், 5 முதல் 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தைக்கு வரத்து அதிகரிக்கும் நிலையில், இதன் விலை மேலும் சரிவடையும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
சென்ற நவம்பர் நிலவரப்படி, கோதுமை விலை 18 சதவீதமும், பருப்பு வகைகளின் விலை 22 சதவீதமும் உயர்ந்திருந்தது.இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, இவற்றின் விலையும் படிப்படியாக குறையத் துவங்கிஉள்ளது.குறிப்பாக, கோதுமையின் விலை 7 சதவீதம் அளவிற்கு சரிவைக் கண்டுள்ளது.
மேலும்,சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு டன் கச்சா பாமாயிலின் விலை, 1,200 டாலராக இருந்தது. இது, தற்போது, 800 டாலராக குறைந்துள்ளது. இதேபோன்று, சோயா எண்ணெய்யின் விலையும் சரிவடைந்துள்ளது.
கடுகு:சாதகமான பருவநிலை மற்றும் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் நிலையில், சென்ற 2012ம் ஆண்டில், 55 லட்சம் டன்னாக இருந்த கடுகு உற்பத்தி, நடப்பாண்டில், 65 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பாண்டில், ராஜஸ்தான் மாநிலத்தில், கடுகு பயிரிடும் பரப்பளவு, 34 லட்சம் ஹெக்டேரை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதன் பரப்பளவு, சென்ற ஆண்டில், 25 லட்சம் ஹெக்டேராக இருந்தது. நாட்டின் கடுகு உற்பத்தியில், இம்மாநிலத்தின் பங்களிப்பு, 40 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொண்டைக் கடலை:இது போன்ற காரணங்களால், உள்நாட்டில், சமையல் எண்ணெய் விலை கணிசமாக குறையும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும், உள்நாட்டில், கொண்டைக் கடலை பயிரிடும் பரப்பளவு உயர்ந்துள்ளது. இதனால், சென்ற அக்டோபர் மாதத்தில், 5,000 ரூபாயாக இருந்த ஒரு குவிண்டால் கொண்டைக் கடலையின் விலை, தற்போது, 3,600 ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதன் வரத்து, அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் நிலையில், இதன் விலை மேலும் சரிவடைய வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து, அதிகளவில் பருப்பு இறக்குமதி செய்து கொள்வதால், உள்நாட்டில் இதன் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்து வருகிறது. நடப்பாண்டில், இதன் இறக்குமதி, 4 லட்சம் டன்னாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இறக்குமதி, முன்பு, 1 லட்சம் டன்னாக இருந்தது.
கோதுமை:கோதுமையை பொறுத்தவரை, சாதகமான சூழ்நிலை நிலவும் பட்சத்தில், இதன் உற்பத்தி நடப்பாண்டில், கடந்த ஆண்டின் சாதனை அளவான, 9.30 கோடி டன்னைக் காட்டிலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, கோதுமை பயிரிடும் பரப்பளவு, 2.73 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது. எனினும், உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|