பதிவு செய்த நாள்
05 ஜன2013
09:23
புதுடில்லி: நிதிப்பற்றாக்குறையை குறைக்க, விஜய் கேல்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், விரைவில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயரலாம்.நிதிப்பற்றாக்குறையை குறைப்பது தொடர்பாக, ஆலோசனைகள் வழங்குவதற்காக, விஜய் கேல்கர் என்பவர் தலைமையில், கமிட்டி ஒன்றை மத்திய நிதி அமைச்சகம் நியமித்தது.இந்த கமிட்டி அளித்த பரிந்துரையில், 'டீசல், சமையல் எரிவாயு உட்பட, எரிபொருட்களுக்கான விலையை உயர்த்த வேண்டும்; டீசல் மீதான விலை கட்டுப்பாட்டை, 2014-15ம் நிதியாண்டு துவங்கும் முன், மத்திய அரசு கைவிட வேண்டும். மண்ணெண்ணெய் விலையையும் உயர்த்த வேண்டும்' என, தெரிவித்திருந்தது.இந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதனால், விரைவில், டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை உயரலாம். இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலிய அமைச்சர், வீரப்ப மொய்லி கூறுகையில், ''விஜய் கேல்கர் கமிட்டி அளித்த பரிந்துரைகள், யோசனைகளே. அவற்றை பெட்ரோலிய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. அதன் மீது இன்னும் முடிவு எடுக்கவில்லை. மானிய விலையில் வழங்கப்படும், சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஒன்பதாக அதிகரிப்பது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது,'' என்றார்.டீசல் விலை, கடந்த ஆண்டு செப்டம்பர், 14ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, லிட்டருக்கு, 5.63 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதனால், டில்லியில் லிட்டருக்கு, 47.15 ரூபாய் என்ற அளவில் டீசல் விற்கப்படுகிறது. அதேநேரத்தில், 2011 ஜூன் மாதத்திற்குப் பிறகு, மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை.டீசல் விற்பனையில், லிட்டர் ஒன்றுக்கு, 10.16 ரூபாயும், மண்ணெண்ணெய் விற்பனையில், லிட்டருக்கு, 32.17 ரூபாயும், சமையல் காஸ் விற்பனையில், சிலிண்டர் ஒன்றுக்கு, 490 ரூபாயும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது இழப்பை சந்தித்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|