பதிவு செய்த நாள்
07 ஜன2013
01:24
ஓசூர்:சர்வதேச சந்தைகளில் வரவேற்பு இல்லாததால், புத்தாண்டு தினத்தை ஒட்டி, வெளிநாடுகளுக்கு, ஓசூர் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகவில்லை.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த புத்தாண்டில் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், ரோஜா விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.
மண்வளம்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், மலர் சாகுபடிக்கு தகுந்த நல்ல மண் வளம், குளிர்ந்த காலநிலை காணப்படுகிறது. இதை பயன்படுத்தி மலர் விவசாயிகள், 5,000 ஏக்கரில் ஆண்டு முழுவதும் திறந்தவெளி மற்றும் பசுமை கிடங்கு முறையில், ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த காலத்தில் திறந்த வெளியில் சாகுபடி செய்த ரோஜா மலர்கள் மட்டும் உள்ளூர் சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன.பசுமை கிடங்குகளில் உற்பத்தியாகும் தாஜ்மகால், கிரான்ட் கலா, பஸ்ட் ரெட், ரெட் உள்ளிட்ட, 40 வகை ரோஜா மலர்கள், முழுக்க முழுக்க வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது.
குறிப்பாக காதலர் தினம், புத்தாண்டு, கிறிஸ்துமஸ், அன்னையர் தினம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு, ஓசூரில் இருந்து ஆண்டு முழுவதும், 100 கோடி ரோஜா மலர் ஏற்றுமதியானது.ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக, போதிய பருவ மழையில்லாமல் வறட்சி, தொடர் மின் தடையால், பறித்த பூக்களை குளிர்பதன கிடங்குகளில் வைக்க முடியாமல், கொடி கட்டி பறந்த ரோஜா விவசாயம் நலிவடையத் துவங்கியது.
இதனால், தரமில்லாத மலர் உற்பத்தியால், ஓசூர் ரோஜா மலர்களுக்கு, சர்வதேச மலர் சந்தைகளில் வரவேற்பு குறையத் துவங்கியது.விவசாயிகள் தற்போது மதுரை, சென்னை, கோவை, டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து, பசுமை கிடங்குகளில் ரோஜா சாகுபடி செய்தனர்.
கடந்த ஆண்டு படிப்படியாக வெளிநாட்டு ஏற்றுமதி வீழ்ச்சிஅடைந்து, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வெளிநாடுகளுக்கு முற்றிலும் ஓசூர் ரோஜா மலர்கள் ஏற்றுமதியாகவில்லை.மேலும், புத்தாண்டில் உள்ளூர் சந்தைகளிலும் ஏற்றுமதி ரக ரோஜா மலர்கள் விலை வீழ்ச்சியடைந்தது.
கடந்தாண்டு புத்தாண்டில், உள்நாட்டு சந்தைகளில், 20 மலர்கள் கொண்ட ஒரு கொத்து மலர்கள், 180 ரூபாய் வரை விற்பனையானது. நடப்பாண்டு ஒரு கொத்து மலர்கள் விலை, 90 ரூபாய் வரை வீழ்ச்சி அடைந்தது.
வறட்சி:பேரிகையை சேர்ந்த மலர் விவசாயி சிவா கூறியதாவது:வறட்சி, மின் தடையால் தரமற்ற மலர்கள் உற்பத்தியாகின்றன.இந்த மலர்கள், வெளிநாட்டு சந்தைகளில் வரவேற்பு குறைந்து, அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். அதனால், ஏற்றுமதி செய்தால் நஷ்டம் ஏற்படும் என்பதால், நடப்பாண்டு புத்தாண்டு அன்று ஏற்றுமதியாகவில்லை.
அரசு, ஓசூர் தாலுகாவில் வரவேற்பை பெற்ற ரோஜா விவசாயத்தை மேம்படுத்த, தனி கவனம் செலுத்த வேண்டும். இல்லையென்றால், ரோஜா விவசாயம் அழிந்து விடும். இவ்வாறு சிவா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|