பதிவு செய்த நாள்
07 ஜன2013
11:55
புதுடில்லி: நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே போல், ரூ. 2.1 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அதில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய நிதியமைச்சகம் செய்து வருகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கு அதிகளவில் வரிவிதிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் இத்தகைய வரிவிதிப்பின் மூலம் நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவை அதிபர் ஒபாமா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் பொதுத்தேர்தலை கணக்கில் கொண்டு, அது போன்ற ஒரு வரிவிதிப்பைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறுகையில், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு உபரி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாட்டிற்கு மிக அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. அதிக வருமானம் உள்ளவர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரங்கராஜனின் இந்த கருத்து, பணக்காரர்களுக்கு அதிகவரி விதிக்க மத்திய அரசு தயாராகி விட்டதையே காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வரிவிலக்கு வரம்பு உயர்வு: ஆண்டு வருமானம் ரூ.2.1 லட்சத்துக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது தற்போது ரூ. 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீத வரியும், ரூ. 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை உள்ளவர்கள் 20 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|