பதிவு செய்த நாள்
09 ஜன2013
01:04
மும்பை:சர்வதேச பொருளாதார நெருக்கடியால், தகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.,) சார்ந்த பல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.இந்நிறுவனங்கள், ஏற்கனவே கல்லூரி வளாக நேர்காணலில் தேர்வு செய்த பொறியியல் மாணவர்களை பணியில் சேர்க்காமல் தாமதப்படுத்தி வருகின்றன.
பணி ஆணை:இத்துறையைச் சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம், கடந்த செப்டம்பரில், இளம் பட்டதாரிகளை தேர்வு செய்து, பணி ஆணை வழங்கிய பிறகும், அவர்களை பணிக்கு அமர்த்தாமல் உள்ளது.ஒரு சில நிறுவனங்கள், நடப்பு ஆண்டில், வளாகத் தேர்வையே ரத்து செய்துள்ளன.பல நிறுவனங்கள், அவற்றின் ஊதியச் செலவினங்களை
குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. மேலும், நடப்புஆண்டில், மிகக் குறைந்த அளவிலேயே ஊதிய உயர்வு அளிக்க முடிவு செய்துள்ளன.
ஐ.டி., துறையில், திடீரென்று கிடைக்கும் புதிய திட்டங்களுக்காக, பணியாளர்களை காத்திருப்போர் பட்டியலில்
நிறுவனங்கள் வைத்திருப்பது வழக்கம்.இந்த காத்திருப்பு காலத்தில், பணியாளர்களுக்கு, பணி சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இச்செலவினத்தை குறைக்கும் நோக்கில், காத்திருக்கும், பயிற்சி பணியாளர்களின் எண்ணிக்கை யை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.உதாரணமாக, சென்ற 2012ம் ஆண்டு, டி.சி.எஸ்., நிறுவனம், காத்திருப் போருக்கு பயிற்சி அளிப்பதை, 20 சதவீதம் குறைத்துக் கொண்டுள்ளது.
அமெரிக்கா:அது போன்று, இன்போசிஸ் நிறுவனமும், பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை, 69 சதவீதமாக குறைத்துள்ளது.இது குறித்து, வேலைவாய்ப்பு நிறுவனமொன்றின் உயர் அதிகாரி கூறியதாவது:இந்தியாவின் ஐ.டி., துறை, அமெரிக்காவையே பெரிதும் சார்ந்துள்ளது. இத்துறையின் ஏற்றுமதி, 10,000 கோடி டாலராக உள்ளது. இதில், அமெரிக்காவின் பங்களிப்பு, 70 சதவீதமாகும்.இந்நிலையில், அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் தாக்கம், இந்திய ஐ.டி., துறை நிறுவனங்களை பாதித்துள்ளது. இதனால், இந்நிறுவனங்கள், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளன.
புதிய வேலைவாய்ப்புகள்:கடந்த 2012 ம் ஆண்டு, கல்லூரி வளாகத் தேர்வு மூலம், 1.20 லட்சம் இளம் பொறியியல் பட்டதாரிகள், ஐ.டி., நிறுவனங்களுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இது, முந்தைய ஆண்டு தேர்வு செய்யப்பட்டதை விட, 40 சதவீதம் குறைவாகும். முந்தைய 2011ம் ஆண்டில், 2 லட்சம் மாணவர்கள், கல்லூரி வளாகத் தேர்வு மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஐ.டி., துறையில், 2.30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின. இது, நடப்பு, 2012-13ம் நிதியாண்டில்,1.50 -2 லட்சம் என்ற அளவிற்கே இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.அதே சமயம், தற்போது அமெரிக்கா, பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கான சூழல் தென்படுவதால், வரும் 2013-14ம் நிதியாண்டில், ஐ.டி., துறையின் வளர்ச்சி பிரகாசமாக இருக்கும் என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
வளாக தேர்வு:உதாரணமாக, மகிந்திரா சத்யம் நிறுவனம், வரும் நிதியாண்டில், கல்லூரி வளாக நேர்காணல் மூலம், 1,500 - 2,000 இளம் பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில், பல ஐ.டி., நிறுவனங்கள், பணியாளர் தேர்வு குறித்து, வரும் ஜூலை மாதத்திற்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் என, தெரிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|