பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:26
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பருவத்தில், சென்ற வியாழன் வரையிலுமாக, மத்திய அரசின் நெல் கொள்முதல், 1.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்முதலை விட, 10 லட்சம் டன் அதிகமாகும்.உள்நாட்டில், இந்திய உணவு கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள், விவசாயிகளிடமிருந்து, நெல்லை கொள்முதல் செய்கின்றன.
சென்ற அக்டோபர் முதல், இதுவரையிலுமாக, நெல் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, மத்திய அரசு, நடப்பு பருவத்தில், நெல் கொள்முதல் இலக்கை, 4 கோடி டன்னாக உயர்த்தியுள்ளது. இது, கடந்த பருவத்தில், 3.50 கோடி டன்னாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.கடந்த பருவத்தை விட, நடப்பு பருவத்தில், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து, நெல் வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே, நெல் கொள்முதல் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நடப்பு பருவத்தில், மேற்கண்ட இரண்டு மாநிலங்களின் பங்களிப்பு முறையே, 25 லட்சம் டன் மற்றும் 85 லட்சம் டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டுஉள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டின், அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், மேற்கண்ட இரண்டு மாநிலங்கள், மத்திய தொகுப்பிற்கு முறையே, 19 லட்சம் மற்றும் 76 லட்சம் டன் நெல்லை அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட இரண்டு மாநிலங்கள் தவிர, ஆந்திரா (20 லட்சம் டன்), சத்தீஸ்கர் (29 லட்சம் டன்) மற்றும் ஒடிசா (11 லட்சம் டன்) ஆகிய மாநிலங்களிலிருந்தும் அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், போதிய அளவிற்கு மழையின்மையால், இதுவரை, இம்மாநிலத்திலிருந்து, 7.60 லட்சம் டன் அளவிற்கே நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலத்தில், இம்மாநிலத்திலிருந்து, 16 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. நடப்பு முழு பருவத்தில், ஆந்திராவிலிருந்து, 96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த பருவத்தில், இம்மாநிலத்தில் இருந்து, 50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|