பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:28
மும்பை:நடப்பு 2013ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தித்திறன், 10 கோடி டன்னாக அதிகரிக்கும் என, தரக் குறியீட்டு நிறுவனமான, 'கேர்' தெரிவித்துள்ளது.
அதேசமயம், போதிய அளவிற்கு இரும்புத்தாது கிடைக்காததாலும், உருக்கிற்கான தேவை குறைந்துள்ளதாலும், உருக்கு உற்பத்தி நிறுவனங்களின் லாப வரம்பு குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பயன்பாடு:கடந்த 2012ம் ஆண்டில், நாட்டின் உருக்கு உற்பத்தி, 6.82 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய, 2011ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (6.51 கோடி டன்) விட, 3.5 சதவீதம் அதிகமாகும்.
இதே ஆண்டுகளில், நாட்டின் உருக்கு பயன்பாடு, 5.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 6.34 கோடி டன்னிலிருந்து, 6.67 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. உருக்கு இறக்குமதி, 25 சதவீதம் அதிகரித்து, 56 லட்சம் டன்னிலிருந்து, 70 லட்சம் டன்னாகவும், இதன் ஏற்றுமதி, 16.2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 37 லட்சம் டன்னிலிருந்து, 43 லட்சம் டன்னாகவும் இருந்தது.தற்போதைய நிலையில், உள்நாட்டில், உருக்கு நிறுவனங்களுக்கு போதிய அளவிற்கு, இரும்புத்தாது கிடைப்பதில்லை.
நடப்பு 2013ல் உருக்கு நிறுவனங்களுக்கு, 16-17 கோடி டன் இரும்புத்தாது தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், அந்த அளவிற்கு இரும்புத்தாது கிடைக்காததால், 3 கோடி டன் அளவிற்கு பற்றாக்குறை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இத்துறை நிறுவனங்கள், பெருமளவிற்கு இரும்புத்தாதுவை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்ற மதிப்பீடும் உள்ளது.உருக்கிற்கான தேவை குறைந்துஉள்ளதை அடுத்து, நடப்பாண்டில், உருக்கு உற்பத்தி அதே அளவிற்கு தான் இருக்கும் என, தெரிகிறது.
இந்நிலையில், வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், இந்நிறுவனங்களுக்கு நடைமுறை மூலதனச் செலவு அதிகரித்துள்ளது. திட்டங்கள் :இதை ஈடுகட்டும் வகையில், சென்ற டிசம்பர் மாதத்தில், இத்துறை நிறுவனங்கள், உருக்கின் விலையை, டன்னுக்கு, 500-1,000 ரூபாய் வரை உயர்த்தின.நடப்பு 2013ம் ஆண்டில், இந்திய நிறுவனங்களின், உருக்கு உற்பத்தி, கடந்த ஆண்டை விட, 5 சதவீதம் அதிகரிக்கும் என, உலக உருக்கு உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைக்களுக்காக, 1 லட்சம் கோடி டாலர் மதிப்பீட்டில், பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள உள்ளது. அவ்வாறு, திட்டங்கள் மேற்கொள்ளப்படும் நிலையில், உருக்கிற்கான தேவை மேலும் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|