பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:40
கோபி:மின் தடை, சாயப்பட்டறை இடிப்பு காரணமாக, 50 சதவீத காடா துணி, பிரின்டுக்காக, வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால், ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 170க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. சங்கங்களில் உற்பத்தியாகும் பல வகையான துணிகள், இந்தியாவில் உள்ள, 203 கோ-ஆப்டெக்ஸ் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்கள்:ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, காஞ்சிகோவில், சென்னிமலை, பவானி, வெள்ளோடு, அரச்சலூர், திங்களூர் உள்ளிட்ட பகுதிகளில், 30க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. கைத்தறி நெசவாளர் சங்கங்கள் மூலம், கால் மிதியடி, ஜமுக்காளம் மற்றும் காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினமும், 1 லட்சம் முதல், 5 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்திஆகிறது.
உற்பத்தி:காடா துணியில் இருந்து பெட்ஷீட், திரை சீலை, கால் மிதியடி, சுடிதார், சேலை என, பல ரகங்கள் தயாரிக்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்களைத் தவிர, மாவட்டம் முழுவதும், பல ஆயிரக்கணக்கான, தனியார் தறிப் பட்டறைகள் மூலம், வாரத்துக்கு, 1 கோடி மீட்டர் அளவிற்கு காடா துணிகள் உற்பத்தியாகின்றன.ஈரோடு மாவட்டத்தில், நூற்றுக்கணக்கான சாயப்பட்டறைகள் மூலம், லட்சக்கணக்கான மீட்டர் காடா துணிகள், பிரின்டிங் செய்து, ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஈரோடில், 'ஓவான்' மற்றும் திருப்பூரில், 'ஒசேரி' என, இரு வகைகளில் பிரின்டிங் செய்யப்படுகிறது. இப்பகுதியில் இருந்து, ஆண்டு ஒன்றுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கரூர் ஏற்றுமதியாளர்கள் பெரும்பாலும், ஈரோட்டில் உள்ள சாயப்பட்டறைகளில் பிரின்டிங் செய்து, ஏற்றுமதி செய்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில், ஏற்படும் மின் தடை மற்றும் சாயப்பட்டறை இடிப்பால், 50 சதவீத காடா துணிகள், ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிக்கு பிரின்டிங் செய்ய அனுப்பப்படுகின்றன.
வேலைவாய்ப்பு:பிரின்டிங் தொழிலை சார்ந்து சைசிங், கேலரிங்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.வெளிமாநிலங்களுக்கு காடா துணிகள் செல்வதால், ஈரோடு மாவட்ட தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, காடா துணி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் உள்ள, கூட்டுறவு சங்கங்களில், தினமும், 3 முதல், 5 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தியாகிறது. இங்கு, சாயப்பட்டறைகளில், பிரின்டிங் செய்ய கூடுதலான கூலி பெறுவதாலும், மின் தடை, சாயப்பட்டறை இடிப்பு, வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் வழங்க இயலாமை போன்றவற்றால், 50 சதவீத காடா துணிகள், ஜெய்ப்பூர் உள்ளிட்ட, வடமாநிலங்களுக்கு பிரின்டிங்கிற்காக கொண்டு செல்லப்படுகின்றன.
விசைத்தறி:கூட்டுறவு சங்கங்கள் தவிர, ஈரோடு மாவட்டத்தில், தனியார் விசைத்தறியில் உற்பத்தியாகும் காடா துணிகளும், வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், பிரின்டிங் தொழிலை சார்ந்துள்ள, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப் பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் காடா துணிகள், வடமாநிலங்களுக்கு செல்வதை தடுத்து நிறுத்தி, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|