பதிவு செய்த நாள்
14 ஜன2013
02:48
நடப்பாண்டு, பங்குச்சந்தையின் எழுச்சி காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலை சரியும் அல்லது ஏற்ற, இறக்கமின்றி இருக்கும் என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.மந்த நிலை:கடந்த 2008ம் ஆண்டு முதல், சர்வதேச நாடுகள், நிதி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை என, பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகின்றன. இதன் தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவைக் கண்டது.
குறிப்பாக, 2011ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், பங்குச்சந்தையில் முதலீடு குறைந்து காணப்பட்டது.அதே சமயம், இதே காலத்தில், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. அதன் விலையும் மள மள... வென உயர்ந்தது. மதிப்பீட்டு காலத்தில், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், ஆண்டுக்கு சராசரியாக, 25-32 சதவீத வருவாயை பெற்றனர்.இந்த நிலை, சென்ற ஆண்டு முதல் மாறத் துவங்கியுள்ளது. பொருளாதார மந்த நிலையில் இருந்து, சர்வதேச நாடுகள் மீண்டு வருவது தான் இதற்கு காரணம்.
இதன் தாக்கத்தால், இந்திய பொருளாதாரமும் மந்த நிலையில் இருந்து மெல்ல விடுபடத் துவங்கிஉள்ளது. இதனிடையே, மத்திய அரசும், சென்ற ஆண்டின் பிற்பாதியில், பல்வேறு நிதி சீர்த்திருத்த நடவடிக்கைகளை அறிவித்தது.இது, இந்தியாவின் வளர்ச்சி குறித்த நம்பிக்கையை அன்னிய நிதி நிறுவனங்களிடம் ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அன்னிய நிதி நிறுவனங்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன.
வருவாய்:கடந்த ஆண்டு நிலவரப்படி, இந்திய பங்குச் சந்தையில் மேற்கொண்ட முதலீட்டிற்கு, 25 சதவீத வருவாய் கிடைத்தது. அதே சமயம், இதே காலத்தில், தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய், 13.04 சதவீதமாக குறைந்து போனது.இதையடுத்து, தங்கத்தில் முதலீடு செய்வதை, முதலீட்டாளர்கள் குறைக்கத் துவங்கினர்.குறிப்பாக, தங்கத்தில் முதலீடு செய்யப்படும் "கோல்டு இ.டி.எப்.,' என்ற பரஸ்பர நிதி திட்டங்களில், முதலீடு குறைந்து வருகிறது. சென்ற 2012ம் ஆண்டில், இத்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு, 1,826 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
இது, 2011ம் ஆண்டு, 4,046 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஐந்து ஆண்டுகளில், முதன் முறையாக, சென்ற ஆண்டு தான், தங்க பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு குறைந்துள்ளது என்பது, குறிப்பிடத்தக்கது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தற்போது வரை, உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும், தங்க இ.டி.எப்., திட்டங்களில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 20 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில், 50 சதவீதம் அதிகரித்திருந்தது. முதலீடு சார்ந்த கண்ணோட்டத்தில், தங்கத்தின் பளபளப்பு மங்கி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
நிதி கொள்கை:அமெரிக்க ரிசர்வ் வங்கி, அடுத்தடுத்து அதன் நிதிக் கொள்கையை தளர்த்தியதால், கடந்த 2011ம் ஆண்டு வரை, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது.அதே சமயம், சர்வதேச பொருளாதார மந்த நிலையால், தங்கம், பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்பட்டது.
இந்நிலையில், சென்ற ஆண்டின் பிற்பகுதியில், மந்த நிலையில் இருந்து சர்வதேச நாடுகள் மீள்வதற்கான அறிகுறிகள் தோன்றின. இதனால், அமெரிக்க ரிசர்வ் வங்கி, மூன்றாவது முறையாக, நிதிக் கொள்கையை தளர்த்திய போதிலும், தங்கத்தில் முதலீடு அதிகரிக்கவில்லை என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பணவீக்கம் கட்டுக்குள் வந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நிலையாக இருக்கும்பட்சத்தில், தங்கம் விலை, உயர வாய்ப்பில்லை என, சந்தை ஆய்வாளர் அம்பரீஷ் பாலிகா தெரிவித்தார்.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|