பதிவு செய்த நாள்
22 ஜன2013
01:22
தமிழகத்தில் உள்ள அசைவ ஓட்டல்கள், அரிசி, மட்டன், சிக்கன், எண்ணெய், சிலிண்டர் விலை உயர்வைக் காரணம் காட்டி, அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தி உள்ளன.
மீன்கள்:தமிழகத்தில் பொன்னி, சீரகசம்பா, பாசுமதி ரக அரிசியின் விலை கிலோவுக்கு, ஐந்து ரூபாய் முதல், 17 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது. இதே போல் கடந்த ஆண்டு, ஒரு கிலோ மட்டன், 340 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 450 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கறிக் கோழி விலை, கிலோவுக்கு, 25 ரூபாயும், நாட்டுக் கோழி விலை, கிலோவுக்கு, 30 ரூபாய் வரையிலும், அனைத்து ரக மீன்களின் விலை, 15 சதவீதம் வரையிலும், காடை, கவுதாரி ஆகியவற்றின் விலை, ஜோடிக்கு, 10 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளன.மேலும், எண்ணெய் வகைகள், மசாலா வகைகளின் விலை, 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இவற்றுக்கு எல்லாம் மேலாக, கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில், வர்த்தக சிலிண்டர், 1,450 ரூபாய்க்கு விற்றது, தற்போது, 1,760 ரூபாயாக உயர்ந்து உள்ளது.இதனால், அசைவ ஓட்டல்களில் சாப்பாடு, பிரியாணி, மட்டன், சிக்கன், மீன் வகைகளின் விலை, 20 சதவீதம் வரை, உயர்த்தப்பட்டுள்ளது.
பார்சல் சாப்பாடு:கடந்த மாதம் வரை, சாப்பாடு, 40 ரூபாய்க்கு விற்றது, 50 ரூபாயாகவும், பார்சல் சாப்பாடு, 50 ரூபாய்க்கு விற்றது, 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.இதுவே சிக்கன் பிரியாணி, 90 ரூபாய்க்கு விற்றது, 100 ரூபாயாகவும், மட்டன் பிரியாணி, 110 ரூபாய்க்கு விற்றது, 120 ரூபாயாகவும், முட்டை பிரியாணி, 80 ரூபாய்க்கு விற்றது, 90 ரூபாயாகவும், குஸ்கா, 40 ரூபாய்க்கு விற்றது, 50 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
மேலும் மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, மீன் வறுவல், சிக்கன் சில்லி, நண்டு பிரை, காடை, கவுதாரி, புறா, முயல் ஆகியவற்றின் சுக்கா, பிரை, குழம்பு வகைகளின் விலை, 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.நடுத்தர ஓட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த விலைப் பட்டியலை விட, குளிர்சாதன வசதி கொண்ட, ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில், 20 முதல், 40 சதவீதம் வரை, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை ஓட்டல் உரிமையாளர் செல்வராஜ் கூறியதாவது:தமிழகத்தில் உணவு தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் அனைத்து பொருட்களின் விலையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில், 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கட்டடங்களின் வாடகை உயர்வு, தொழிலாளர்களின் சம்பளம், மின்சார கட்டணம் ஆகியனவும் அதிகரித்து விட்டன. இந்த விலை உயர்வு, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளி வருகிறது. எங்கள் தொழிலை காக்க, விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
சைவ உணவும் உயர்வு:சைவ ஓட்டல்களிலும் விலை உயர்வு அரங்கேற்றப்பட்டுள்ளது.முக்கிய நகரங்களில் செயல்படும் ஓட்டல்களில், 45 ரூபாய் முதல், 48 ரூபாய் வரை, விற்பனை செய்யப்பட்ட அளவு சாப்பாடு, 50 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஸ்பெஷல் சாப்பாடு, 55 ரூபாய்க்கு வழங்கப்பட்டது, 70 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.இதே போல் பார்சல் சாப்பாடு, 68 ரூபாய்க்கு வழங்கப்பட்டது, 85 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தயிர், தேங்காய், புளி, லெமன் சாதம் மற்றும் வெஜிடபிள் பிரியாணி விலை, 24 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|