பதிவு செய்த நாள்
22 ஜன2013
10:10
புதுடில்லி : டில்லியில், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 12 சமையல் காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் வழங்க, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும், சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு ஆறாக குறைக்க, கடந்த செப்டம்பரில், மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, டில்லி மாநிலத்தில், ஆண்டுக்கு, ஒன்பது காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படும் என, அம்மாநில அரசு அறிவித்தது. இதற்காக, கூடுதலாக செலவாகும் தொகையை, மாநில அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும், மற்ற மாநிலங்களிலும், இதே நடைமுறையை பின்பற்ற, காங்கிரஸ் தலைவர் சோனியா வலியுறுத்தினார். இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு ஒன்பதாக உயர்த்தி, சமீபத்தில், மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, டில்லி அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நடந்தது. இதில், மண்ணெண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கும் திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, 12 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வகையில், 3.56 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, 12 காஸ் சிலிண்டர்கள் கிடைக்க உள்ளன. டில்லி நகரில் மண்ணெண்ணெய் பயன்படுத்துவதை, முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், "மண்ணெண்ணெய் இல்லா டில்லி' என்ற புது திட்டத்தை, மாநில அரசு துவக்கியது. இதன்படி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு, கேஸ் ஸ்டவ், சிலிண்டர், ரெகுலேட்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|