பதிவு செய்த நாள்
23 ஜன2013
00:51
மும்பை:மத்திய அரசு, நாட்டின் தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், நேற்று முன்தினம் தங்கம் மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை, 4 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது.இதனால், உள்நாட்டில், தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது என, பல மாநிலங்களை சேர்ந்த தங்க ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பற்றாக்குறை:மேலும், கடத்தல் வாயிலாக தங்கம் அதிகளவில் வருவதற்கும், இந்த இறக்குமதி வரி உயர்வு வழிவகுத்துள்ளது என, கூறப்படுகிறது. நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 3,800 கோடி டாலர் மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக, தங்கம் இறக்குமதி வாயிலாக, நம்நாட்டின் அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறுகிறது.
நாட்டின் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 5.4 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து உள்ளது. எனவே, மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 600 டன்னாக இருந்தது. இந்நிலையில், வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நான்காவது காலாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 100-150 டன்னாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
செலவினம்:சென்ற டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில், தங்கம் இறக்குமதி, 200 டன்னாக இருந்தது என, மும்பை தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு, தங்கத்தின் மீதான வரியை, 2 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் இறக்குமதிக்கான வரி செலவினம், 60 ரூபாயாகவும், ஒரு கிலோ தங்கம் இறக்குமதிக்கான வரி செலவினம், 1.40 லட்சம் ரூபாயிலிருந்து, 2 லட்சம் ரூபாயாகவும் உயரும்.
இதனால், கள்ளக் கடத்தல் வாயிலாக, தங்கம் கொண்டு வருவது அதிகரிக்கும்.தங்கம் விலையில், சர்வதேச சந்தைக்கும், உள்நாட்டு சந்தைக்கும் உள்ள வித்தியாசம், 7 சதவீதம் என்ற அளவில் உயரும். வேலைவாய்ப்பு:வரி உயர்வால், உள்நாட்டில், தங்க ஆபரண துறையை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிப்புக்குள்ளாகும் என, ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு, இறக்குமதி வரியை உயர்த்துவதற்கு பதிலாக, தங்கம் ஆபரணங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அது, நாட்டின் ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கச் செய்வதுடன், இத்துறையை வளமாக்க வழிவகை செய்யும் என, மும்பை தங்க ஆபரண கூட்டமைப்பின் தலைவர் மோகித் கம்போஜ் தெரிவித்தார்.இந்தியாவை பொறுத்தவரை, பாரம்பரியமாக தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுடன், மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படுகிறது.
சவரனுக்கு ரூ.424 அதிகரிப்பு:தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதை அடுத்து, நேற்று, ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு, 424 ரூபாய் அதிகரித்து, 23,328 ரூபாயாக உயர்ந்து உள்ளது.22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,916 ரூபாய்க்கு விற்பனையானது. தங்கம் விலை மேலும் உயரும் என, நகை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.அதே சமயம், நேற்று வெள்ளி விலை வீழ்ச்சி கண்டது. ஒரு கிலோ வெள்ளி, 45 ரூபாய் குறைந்து, 59,460 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|