பதிவு செய்த நாள்
25 ஜன2013
00:21

கொச்சி:அடுத்த ஐந்து ஆண்டுகளில், 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக, தேசிய கயிறு ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை பயிலகத்தின் இயக்குனர் கே.ஆர். அனில் தெரிவித்துள்ளார்.
கயிறு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில், கேரளா முன்னிலையில் உள்ளது. உள்நாட்டில், உற்பத்தியாகும் கயிறு பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகள்:இருப்பினும், மொத்த கயிறு ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும். மேற்கண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், இந்நாடுகளுக்கான கயிறு பொருட்கள் ஏற்றுமதி குறைந்து உள்ளது.கடந்த, 2011-12ம் நிதியாண்டில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு கயிறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில், இதன் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வரும், 2016-17ம் நிதியாண்டில், கேரள கயிறு வாரியம், 2,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு இதை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இது தவிர, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உள்நாட்டில், 5,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, கயிறு பொருட்கள் விற்பனையை அதிகரிக்கும் வகையில், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையில், ஆலப்புழாவில், சர்வதேச கயிறு பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், இத்துறையில் ஈடுபடு ம், நிறுவனங்களும், 60 நாடுகளில்இருந்து, தொழில் முனைவோர்களும், பார்வையாளர்களும் பங்கேற்பார்கள் என, எதிர்பார்க்கப் படுகிறது.இதுநாள் வரை, தேங்காய் நாரிலிருந்து, மிதியடிகள், தரைவிரிப்புகள், கயிறுகள், மண் அரிமானத்தை தடுக்கும் விரிப்புகள் போன்றவை தயாரிக்கப்பட்டு வந்தன.
நெடுஞ்சாலைகள்:இந்நிலையில், தற்போது, கயிறு மூலம், பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.நெதர்லாந்து நாட்டில், தேங்காய் நார் மற்றும் துகள்கள், அதிர்வுகளை தடுக்கும் வகையிலும், விளையாட்டு மைதானங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பு பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள், கயிறு பொருட்கள் கொண்டு, சுவர் அட்டைகளை தயாரித்து அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. இந்த அட்டைகளை, சுவரில் பொருத்து வதன் வாயிலாக, அறைகளிலிருந்து வெளியேறும் ஒலி அதிர்வுகள் மிகவும் குறைந்து விடுவதாக கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல்:ஐரோப்பிய நாடுகளில், கட்டுமான நடவடிக்கைகளில், இந்த அட்டைகளை பயன்படுத்த பல நிறுவனங்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் ஒலி அதிர்வை தடுக்கும் வகையில், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத, கயிறு பொருட்களால் ஆன, தடுப்புகளை அமைக்க விரும்புவதாக, அனில் மேலும் கூறினார்.
எனவே, எதிர்காலத்தில், இந்திய கயிறு பொருட்கள் துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|