பதிவு செய்த நாள்
27 ஜன2013
00:14
நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, முன் எப்போதும் இல்லாத வகையில், 100 கோடி கிலோவை எட்டி சாதனை படைக்கும் என, ஜவுளி ஆணையர் பீ.ஜோஷி தெரிவித்தார்.சர்வதேச அளவில் பருத்தி நூலிழைக் கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் இதற்கான தேவை மிகவும் சிறப்பான அளவில் உள்ளது.
மதிப்பீடு:இதையடுத்து, முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த, ஏற்றுமதி அளவான, 92 கோடி கிலோவை காட்டிலும், தற் போது, கூடுதலாக, 8 கோடி கிலோ பருத்தி நூலிழை ஏற்றுமதியாகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இதன் ஏற்றுமதி, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 82.76 கோடி கிலோவாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான முதல் ஒன்பது மாத காலத்தில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 75.80 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது என, ஜவுளி ஆணையம் தெரிவித் துள்ளது.இதே போன்று, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் பருத்தி நூலிழை உற்பத்தி, 231.70 கோடி கிலோவாக உயர்ந்துஉள்ளது.
உற்பத்தி:இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை காட்டிலும், 14 சதவீதம் அதிக மாகும். நாட்டின் ஒட்டு மொத்த நூலிழை ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு, 30 சதவீதமாகவும், வங்கதேசத்தின் பங்களிப்பு, 16 சதவீதமாகவும் உள்ளது.நடப்பாண்டில், வங்கதேசத்திற்கான இந்தியாவின் நூலிழை ஏற்றுமதி, மூன்று அல்லது நான்கு சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில், பருத்தி விலை மற்றும் நூலிழை உற்பத்திக்கான செலவினம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, சீனாவிற்கான, பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.பாகிஸ்தான் தொழிற்சாலைகளுக்கு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டின் நூலிழை உற்பத்தி, 30 முதல் 40 சதவீதம் சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், உள்நாட்டில், நூலிழை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகளவில் ஆர்டர்கள் கிடைத்து வருவதாக, இன்டோ கவுன்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கைலாஷ் லால்பூரியா தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் ஒரு கிலோ, "30-எஸ் கோம்ப்டு' வகை பருத்தி நூலிழை விலை, 3.50 டாலராகவும், ஒரு கிலோ, "40-எஸ் கவுன்ட்' நூலிழை விலை, 4 டாலராகவும் உள்ளன.
சீனா:சீனாவில், ஒரு பவுண்ட் பருத்திவிலை, 1.4 டாலர் என்ற அளவில் அதிகரித்து காணப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில் இதன் விலை, 85 சென்டாக குறைந்து காணப்படுகிறது. இதனால், சீன நிறுவனங்கள், இந்தியாவிலிருந்து, அதிகளவில் பருத்தி நூலிழைகளை, இறக்குமதி செய்து கொள்கின்றன.சீனாவில், பணியாளர்களுக்கான ஊதியம் அதிகரித்துள்ளதால், தற்போது, அந்நாடு நூற்பு நடவடிக்கைகளை குறைத்து கொண்டுள்ளது. அதே சமயம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில், கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி ஏற்றுமதி அதிகரிக்கும்:நடப்பு 2012-13ம் சந்தைப் பருவத்தில், நாட்டின் பருத்தி ஏற்றுமதி, 80 லட்சம் பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) அதிகரிக்கும் என, பருத்தி ஆலோசனை கழகம் மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய மதிப்பீட்டில், 70 லட்சம் பொதிகளாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.மதிப்பீட்டு பருவத்தில், பருத்தி உற்பத்தி, 3.30 கோடி பொதிகளாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் முக்கிய நாடுகளில் பருத்தி உற்பத்தி குறையும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில், சென்ற டிசம்பரில், பருத்தி உற்பத்தி, 1.4 சதவீதம் குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டில், நடப்பாண்டு, இதன் உற்பத்தி, 1.70 கோடி பொதிகளிலிருந்து, 1.40 கோடி பொதிகளாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், இந்தியாவின் பருத்தி ஏற்றுமதிக்கான சூழ்நிலை மிகவும் பிரகாச மாகியுள்ளது.
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|