பதிவு செய்த நாள்
28 ஜன2013
00:18
மும்பை:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், மொத்தமாக கொள்முதல் செய்யும் டீசல் விலையை, லிட்டருக்கு, 10 ரூபாய் உயர்த்தியுள்ளதால், சிமென்ட் துறை நிறுவனங்களின் உற்பத்தி செலவினம், மேலும் அதிகரிக்கும் என, தெரிய வந்துள்ளது.
இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஏற்கனவே மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், டீசல் மீதான விலை உயர்வு, இத்துறையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
இது குறித்து, ஸ்ரீ சிமென்ட் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் எச்.எம்.பங்குர் கூறியதாவது:நிறுவனம் மாதத்திற்கு, 10 லட்சம் டன் சிமென்டை உற்பத்தி செய்து வருகிறது. டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளதால், தற்போது, நிறுவனத்தின் உற்பத்தி செலவினம், டன்னுக்கு, 5 ரூபாய் உயர்ந்து, மாதத்திற்கு, 50 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.மின் தட்டுப்பாட்டால், சிமென்ட் நிறுவனங்கள், ஏற்கனவே உற்பத்தி நடவடிக்கைகளுக்கு, டீசலை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இதன் விலை உயர்த்தப்பட்டிருப்பது, இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
டீசல் விலை, லிட்டருக்கு, ஒரு ரூபாய் உயர்த்தப்படும் நிலையில், சாலை வாயிலான சிமென்ட் போக்குவரத்து செலவினம், 700 - 1,000 ரூபாய் வரை அதிகரிக்கும். டில்லி - மும்பை நகரங்களுக்கிடையிலான போக்குவரத்து செலவினம், 54,000 ரூபாயில்இருந்து, 54,700 ரூபாயாக அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.அடிப்படை கட்டுமான திட்டங்களில் ஏற்பட்டுள்ள, மந்த நிலை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை போன்றவை, சிமென்ட் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது, இத்துறை நிறுவனங்களுக்கு மற்றொரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|