பதிவு செய்த நாள்
01 பிப்2013
00:14

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வியாழக் கிழமையன்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி, பங்குகளை விற்பனை செய்தனர்.இதையடுத்து, "சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.55 சதவீத சரிவுடன் முடிவடைந்தது.
முன்னணி நிறுவன பங்குகளின் நிதி நிலை முடிவுகள், எதிர்பார்த்த அளவிற்கு நன்கு இல்லாததால், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் கண்டது. அதேசமயம், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது நேற்றைய வியாபாரத்தில், வங்கி, எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
இருப்பினும், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள் ஆகிய துறைகளை சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 110.02 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,894.98 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,008.83 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,865.72 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா பவர், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பீ.எச்.இ.எல்., சன்பார்மா உள்ளிட்ட, 11 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 21 புள்ளிகள் சரிவடைந்து, 6,034.75 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,058.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 6,025.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|