பதிவு செய்த நாள்
04 பிப்2013
00:40
புதுடில்லி:வெங்காயத்தை வெட்டும்போது தான் கண்களில் கண்ணீர் வரும் என்பதில்லை. சந்தையில், அதை வாங்கும்போதே, கண்ணீர் வந்து விடுகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.கடந்த ஆண்டு, இதே காலத்தில் மொத்த விற்பனையில், 4 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ வெங்காயம், தற்போது 25 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சில்லரை விற்பனையில், 35 - 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
சென்ற ஒரு மாதத்தில் மட்டும், வெங்காயம் விலை 57 சதவீதம் உயர்ந்துள்ளது.கர்நாடகா:மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்கள் தான் வெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. ஆனால், கடுமையான வறட்சி காரணமாக, இம்மாநிலங்களில் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சந்தையில் வெங்காய வரத்து குறைந்து, அதன் விலை அதிகரிக்க வழி வகுத்துள்ளது.கடந்த 2010ம் ஆண்டு, இறுதியிலும், இதே நிலை ஏற்பட்டது. ஒரு கிலோ வெங்காயம், 100 ரூபாய்க்கு விற்பனையானது.
இதையடுத்து, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.உள்நாட்டில், நிலைமை ஓரளவு சீராகி, வெங்காய உற்பத்தி அதிகரித்ததும், அதன் ஏற்றுமதிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதே சமயம், உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில், குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஏற்றுமதி விலை:பின்னர் இது, சர்வதேச போட்டியை சமாளிக்கும் வகையில் படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், உள்நாட்டில் வெங்காய உற்பத்தி அதிகரித்து, அதன் விலை வீழ்ச்சி கண்டது.இதையடுத்து, ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு, கடந்த ஆண்டு ஜூன் மாதம், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது.இதனால், வெங்காயம் தாராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், உள்நாட்டில், வெங்காய வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளது."இது தற்காலிகமானது. வெங்காயம் வரத்து விரைவில் அதிகரித்து, அதன் விலை குறையும்' என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார்.
எனினும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த, மீண்டும், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நிர்ணயிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆலோசனை:மேலும், நுகர்வோர் நலம், வர்த்தகம், வேளாண்மை துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்திலும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.இதன் மூலம், வெங்காய ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டு, உள்நாட்டில் அதன் வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, வெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளதாக, அந்த அரசு அதிகாரி மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|