பதிவு செய்த நாள்
07 பிப்2013
23:54
புதுடில்லி:இந்தியாவிற்கு வரும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. சென்ற ஜனவரி மாதத்தில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த வருவாய், 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, மத்திய சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐந்தாவது இடம்:சர்வதேச அளவில், சுற்றுலா துறையில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் நாடுகளின் பட்டியலில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்திய சுற்றுலாத் துறை, ஆண்டுக்கு, 7.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.நடப்பாண்டு, ஜனவரி மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த, அயல்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 7 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தை (6.81 லட்சம் பேர்) விட, 2.6 சதவீதம் அதிகமாகும்.
கடந்த 2011ம் ஆண்டு, ஜனவரி மாதம், இந்தியாவிற்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 9.4 சதவீதம் அதிகரித்து, 6.23 லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கீட்டு காலத்தில், அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த வருவாய், ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 20.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 8,623 கோடி ரூபாயிலிருந்து, 10,398 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வருவாய்:இது, கடந்த 2011ம் ஆண்டின், ஜனவரி மாதத்தில், 49.3 சதவீதம் வளர்ச்சியடைந்து, 5,777 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது.டாலர் மதிப்பின் அடிப்படையிலான வருவாய், 13.6 சதவீதம் உயர்ந்து, 168 கோடி டாலரிலிருந்து, 191 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. இது, வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஏராளமான இயற்கை வளங்கள், ஆன்மிக தலங்கள், நினைவுச் சின்னங்கள், குகை ஓவியங்கள் போன்ற அரிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நாடாக, இந்தியா திகழ்கிறது. மேலும், இதர நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில், குறைந்த செலவில், தரமான மருத்துவச் சேவை வழங்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இந்தியா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மருத்துவ சுற்றுலா:இந்தியாவிற்கு வரும் மொத்த அயல்நாட்டு சுற்றுலா பயணிகளில், மருத்துவ சேவைக்காக வருவோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்திய மருத்துவ சுற்றுலா துறை, ஆண்டுக்கு, 30 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்தியாவரும் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளில், அமெரிக்கர்கள்,16 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளனர். இதையடுத்து, இங்கிலாந்தை சேர்ந்தவர்கள், 13 சதவீத பங்களிப்புடன், 2-வது இடத்தில் உள்ளனர்.அயல்நாட்டு சுற்றுலாபயணிகள் விரும்பும் மாநிலங்களில், முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், இரண்டாவது இடத்தில், தமிழகமும், மூன்றாவது இடத்தில், டில்லியும் உள்ளன.
சென்னை, மும்பை, ஆக்ரா, டில்லி ஆகிய இடங்கள், சுற்றுலா பயணிகளின் முக்கிய தேர்வாக உள்ளது.மத்திய அரசு, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.
முதலீடு:இதையடுத்து, அயல்நாடுகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், இந்திய சுற்றுலா துறையில் முதலீடு செய்து வருகின்றன. இதனால், உள்நாட்டை சேர்ந்த, பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்று உள்ளனர்.மாநில அரசுகளும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட, பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|