பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:40
புதுடில்லி:பெரிய வியாபாரிகள், கூட்டணி அமைத்துக் கொண்டு, வெங்காயத்தின் விலையை செயற்கையாக உயர்த்துவதாக, தேசிய வர்த்தக போட்டி கட்டுப்பாட்டு ஆணையம் (சி.சி.ஐ.,) தெரிவித்துள்ளது.
ஆய்வு:இந்தியாவில் ஏகபோக வர்த்தகத்தை தடுத்து, சமச்சீரான வணிக நடைமுறையை கண்காணிக்கும் பிரதான அமைப்பாக சி.சி.ஐ., உள்ளது. இந்த அமைப்பின் சார்பில், பெங்களூரை சேர்ந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான பயிலகம், வெங்காய வர்த்தகம் குறித்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநில சந்தைகளில் ஆய்வு மேற்கொண்டது.சி.சி.ஐ.,-யிடம் அளிக்கப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் விவரம்:
இந்திய வெங்காய சந்தைகள் ஒழுங்கற்று உள்ளன. இச்சந்தைகளில், பெரிய வியாபாரிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்கு எதிராக செயல்படும் போக்கு காணப்படுகிறது.ஒரு சில பெரிய வணிகர்கள், இதர சந்தைகளில் உள்ள இடைத்தரகர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்துள்ளனர். இதன் மூலம், அவர்கள், நிச்சயம் வெங்காயம் விலை ஏறும் என்று எதிர்பார்த்து, அவற்றை பதுக்கி வைக்கின்றனர்.
விவசாயிகள்:வெங்காய சந்தைகளின் செயல்பாடுகள், வர்த்தகர்களால் ஒருதலைப் பட்சமாக தீர்மானிக்கப்படுகின்றன. இதில், விவசாயிகளின் பங்களிப்பு எதுவும் இல்லை. வெங்காயம் விலையை நிர்ணயிப்பதிலும், விவசாயிகளின் பங்கு குறைவாகவே உள்ளது. இதற்கு, 1.15-1.30 ஏக்கர் என்ற அளவில், மிகக் குறைவாக வெங்காயம் சாகுபடி செய்வது, சாதகமற்ற பருவ நிலை உள்ளிட்ட காரணங்களை கூறலாம்.
பெரும்பான்மையான வெங்காய வர்த்தகம், தரகர்கள் மற்றும் வர்த்தகர்களின் கையில் சிக்கியுள்ளது. வெங்காய விலையேற்றம், உணவு பாதுகாப்பு, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
வெங்காயத்தை சந்தைப்படுத்தும் செலவினங்கள், சந்தைகளில் போதுமான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, ஒரு சில வணிகர்களின் கட்டுப்பாட்டில் வெங்காய வர்த்தகம் உள்ளது, சந்தையில் புதிய வர்த்தகர்கள் நுழைவதை தடுப்பது, அடிக்கடி நடக்கும் வர்த்தகர்களின் வேலைநிறுத்த போராட்டம் உள்ளிட்டவை தான், வெங்காய விலை உயர்விற்கு முக்கிய காரணங்களாகும்.
வெங்காய வர்த்தகத்தில் வியாபாரிகள், கூட்டணி அமைத்து செயல்படுவதை தடுக்க வேண்டும். இதற்கு, வேளாண் பொருட்கள், உற்பத்தி சந்தை குழுவை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் தான், வெங்காய ஏலம் நடைபெற வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும்.
உணவு பொருள்:மேலும், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் கூட்டுறவு சங்கங்களையும் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம், வணிகர்கள் கூட்டாக செயல் படுவதை தடுக்க முடியும்.வெங்காயம், மிக முக்கியமான உணவுப் பொருளாக உள்ளது. வெங்காய விலையில் ஏற்படும் மாறுதல், வர்த்தகத்தில் மட்டுமின்றி, அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி விடும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|