பதிவு செய்த நாள்
09 பிப்2013
00:45
புதுடில்லி:நடப்பு 2012-13ம் பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாக சரிவடையும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.நாட்டின் பல மாநிலங்களில், காலம் தவறிய மழைப்பொழிவு மற்றும் வறட்சியால், நடப்பு வேளாண் பருவத்தில், ஒட்டு மொத்த அளவில், உணவு தானிய உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா:குறிப்பாக, உணவு தானியங்கள் அதிகளவில் உற்பத்தியாகும், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.இதன் காரணமாக, நடப்பு பருவத்தில், நெல் உள்ளிட்ட இதர உணவு தானியங்கள் உற்பத்தி, 25.01 கோடி டன் அளவிற்கே இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இது, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாகும் என, அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கடந்த, 2011-12ம் வேளாண் பருவத்தில், நாட்டின் உணவு தானிய உற்பத்தி, 25.93 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பு பருவத்திற்கான தானிய உற்பத்தி, 3.5 சதவீதம் குறையும் என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இரண்டாம் கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீட்டின்படி, கடந்த பருவத்தில், 10.53 கோடி டன்னாக இருந்த நாட்டின் நெல் உற்பத்தி, நடப்பு பருவத்தில்,10.18 கோடி டன்னாக சரிவடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கோதுமை உற்பத்தியும், 9.49 கோடி டன்னிலிருந்து, 9.23 கோடி டன்னாக வீழ்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதர தானியங்கள் உற்பத்தியும், 4.20 கோடி டன்னிலிருந்து, 3.85 கோடி டன்னாக சரிவடையும் என, கணக்கிடப்பட்டுள்ளது.அதேசமயம், கடந்த 2011-12ம் பருவத்தில்,1.71 கோடி டன்னாக இருந்த பருப்பு வகைகள் உற்பத்தி, நடப்பு 2012-13ம் பருவத்தில், 1.76 கோடி டன்னாக அதிகரிக்கும் என, இரண்டாம் கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
எண்ணெய் வித்துக்கள்:எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 2.98 கோடி டன்னில் இருந்து, 2.95 கோடி டன்னாக சற்று குறையும் என,மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், நடப்பு பருவத்தில், நாட்டின் பருத்தி உற்பத்தியும், 3.38 கோடி பொதிகளாக (ஒரு பொதி=170 கிலோ) குறையும் என, கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில், இதன் உற்பத்தி, 3.52 கோடி பொதிகள் என்ற அளவில் சற்று அதிகரித்து காணப்பட்டது.இவை தவிர, நடப்பு பருவத்தில், கரும்பு உற்பத்தியும், 36.10 கோடி டன்னிலிருந்து, 33.45 கோடி டன்னாக வீழ்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் உணவு தானிய உற்பத்தியில் அதிக பங்களிப்பை கொண்டுள்ள, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில், சென்ற 2012ம் ஆண்டில், வழக்கத்திற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது. இதன் காரணமாக, அம்மாநிலங்களின் பல பகுதிகளில் வறட்சி நிலவுகிறது என, வேளாண் அமைச்சகத்தின் இரண்டாம் கட்ட முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிறைவு:உணவுதானிய உற்பத்தியில், நம்நாடு தன்னிறைவு கண்டுள்ளது. என்றாலும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. இதையடுத்து, நம்நாடு, தேவையை ஈடு செய்யும் வகையில், சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை, 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|