பதிவு செய்த நாள்
10 பிப்2013
00:16
புதுடில்லி:மத்திய அரசு, வரும் 2013-14ம் நிதியாண்டில், உர மானியத்திற்கான செலவை, 15 சதவீதம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், பெட்ரோலியப் பொருட்கள், உணவிற்கு அடுத்தபடியாக, உரத்திற்கான மானியச் செலவு மூன்றாவது இடத்தில் உள்ளது.
மதிப்பீடு:ஒட்டுமொத்த அளவில், நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நடப்பு நிதியாண்டில், மானியச் செலவினம், 2.4 சதவீதமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மானியச் செலவு அதிகரித்து வருவதால், மத்திய அரசின் நிதி பற்றாக்குறையும் உயர்கிறது. இது, அரசுக்கு பல்வேறு வகையில், இடையூறு அளிப்பதாக உள்ளது.அடுத்த மாதத்துடன் நிறைவடையும், நடப்பு நிதியாண்டில், உர மானியச் செலவினம், 60,970 கோடி ரூபாயாக இருக்கும் என, மத்திய அரசு, மதிப்பீடு செய்துஉள்ளது. இது, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தரக்குறியீடு:இதன் காரணமாகவே, மத்திய அரசு, வரும் 2013-14ம் நிதியாண்டில், உர மானியத்திற்கான செலவினத்தை, 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக, அரசுக்கு, 9,150 கோடி ரூபாய் சேமிப்பு கிடைக்கும். அவ்வாறு, மானியச் செலவு குறைக்கப்படும் நிலையில், அதனால், நிதிப் பற்றாக்குறை, 0.1-0.2 சதவீதம் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பணவீக்கம் அதிகரித்தமை மற்றும் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து வருவது போன்றவற்றால், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனங்கள், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைத்தன.இதை கருத்தில் கொண்டே, மத்திய அரசு, அண்மையில், எரிபொருள் மீதான மானியச் சுமையை குறைக்கும் வகையில், ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக, நிதிப் பற்றாக்குறையை, 5.3 சதவீதமாக குறைக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சகம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான மானியச் சுமையை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
வரும் 2013-14ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு, சமூக நலத் திட்டங்கள், பாதுகாப்பு போன்றவற்றிற்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.உர மானியச் சுமையை குறைத்தால், அது, நாட்டின், வேளாண் உற்பத்தியை பாதிக்கும் என்பதுடன், இதற்கு, விவசாயிகள் மத்தியில், கடும் எதிர்ப்பு ஏற்படும்.
இதுகுறித்து, மத்திய உரத் துறையின் இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜனா கூறுகையில், "உர மானியத்தை குறைப்பது குறித்து, இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இருப்பினும், சர்வதேச சந்தையில், உரங்களின் விலை குறையும் நிலையில், அது, மானியச் சுமையையும் வெகுவாக குறைத்து விடும்' என்றார்.
இறக்குமதி செலவினம்:இதுகுறித்து, முன்னணி உரத் தயாரிப்பு நிறுவனத்தின் உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போதைய நிலையில், பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் ஆகிய உரங்களின் இறக்குமதி செலவினம் குறைந்துஉள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், ஒரு டன், முரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி.,) உரத்தின் விலை, 490 டாலராகவும், டை-அமோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி.,) உரத்தின் விலை, 580 டாலராகவும் இருந்தது.இந்நிலையில், வரும் நிதிஆண்டிற்கு, ஒரு டன் எம்.ஓ.பி., உரத்தை, 427 டாலருக்கு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுஉள்ளது. இதேபோன்று, சர்வதேச சந்தையில், ஒரு டன் டீ.ஏ.பி. உரத்தின் விலையும், 525 டாலராக சரிவடைந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|