பதிவு செய்த நாள்
13 பிப்2013
00:40
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் இது வரையிலுமாக, இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, 7,818 கோடி ரூபாயை திரட்டியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' தெரிவித்துள்ளது. இந்தியன் இன்ப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி, ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், ரெலிகார் பின்வெஸ்ட் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடுகள் வாயிலாக, மேற்கண்ட தொகையை திரட்டியுள்ளன. ஆனால், இந்நிறுவனங்கள், திரட்ட நிர்ணயித்திருந்த இலக்கான, 4,875 கோடி ரூபாயை விட, இது, இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட ஒன்பது நிறுவனங்களுள், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டுமே, நிர்ணயித்திருந்த இலக்கு தொகையை விட, குறைவாக நிதி திரட்டி உள்ளது. அதாவது, இந்நிறுவனம், 1,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 700 கோடி ரூபாய் மட்டுமே திரட்டியுள்ளது. வங்கிகளின் டெபாசிட்டிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட, நிறுவனங்கள், கடன்பத்திரங்களுக்கு வழங்கும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால், முதலீட்டாளர்கள் இது போன்ற கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, 5 ஆண்டு காலத்திற்கு, வங்கிகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு, 9-9.5 சதவீத வட்டி வழங்கப்படும் நிலையில், இதே காலத்திற்கு, கடன் பத்திர முதலீட்டிற்கு, 10-12 சதவீத அளவிற்கு வட்டி வழங்கப்படுகிறது. இருப்பினும், பல நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கான முதலீட்டு காலம், 10 முதல் 15 ஆண்டு வரை உள்ளது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்திய நிறுவனங்கள், பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடுகளின் வாயிலாக, 31,100 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்திருந்தன. ஆனால், அவ்வாண்டு, நிறுவனங்கள், இது போன்ற வெளியீடுகள் மூலம், 35,611 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|