பதிவு செய்த நாள்
15 பிப்2013
00:07
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வியாழக் கிழமையன்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், முதலீட்டாளர்கள், லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததை அடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் மந்தமாகவே காணப்பட்டது. இருப்பினும், இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் நன்கு இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், பொறியியல், எண்ணெய், எரிவாயு, மின்சாரம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், நுகர்பொருட்கள், உலோகம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 110.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 19,497.18 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,639.83 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,444.33 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், விப்ரோ, மாருதி உள்ளிட்ட, 16 நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்தும், இந்துஸ்தான் யூனிலிவர், டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 36 புள்ளிகள் சரிவடைந்து, 5,896.95 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,940.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,884.55 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|