பதிவு செய்த நாள்
16 பிப்2013
00:08
புதுடில்லி:சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து, அடுத்த, 15 தினங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.
பரிந்துரை:பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, கடந்த அக்டோபர் மாதம், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்கும் வகையில், அரசுக்கு,
பரிந்துரை செய்திருந்தது.இதன் அடிப்படையில், சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து, கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என, அமைச்சர் தாமஸ் குறிப்பிட்டார்.
தற்போது, உள்நாட்டில் செயல்படும் சர்க்கரை ஆலைகள், உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை மற்றும் வினியோகத்தில், மத்திய அரசு, கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.ஆலைகள் உற்பத்தி செய்யும் மொத்த சர்க்கரையில், குறிப்பிட்ட சதவீத அளவிற்கு மட்டுமே, வெளிச் சந்தையில் விற்க முடியும்.
பொது வினியோகம்:மேலும், இந்நிறுவனங்கள், அவற்றின் மொத்த சர்க்கரை உற்பத்தியில், 10 சதவீதத்தை, மத்திய அரசின் பொது வினியோக திட்டத்திற்காக, ஒரு கிலோ, 20 ரூபாய் என்ற அளவில் அளிக்க வேண்டும். இந்த சர்க்கரை, ரேஷன் கடைகள் வாயிலாக, ஒரு கிலோ, 13.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சர்க்கரை மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் நிலையில், 80 ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட இத்துறை நிறுவனங்கள், உற்பத்தியாகும் சர்க்கரையை எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், வெளிச் சந்தையில் விற்பனை செய்து கொள்ள முடியும். இதனால், சர்க்கரை நிறுவனங்களின் செயல்பாடு, நன்கு அமையும் என்பதுடன்,
விவசாயிகளுக்கும், தங்கு தடையில்லாமல், கரும்பிற்கான தொகையை வழங்க முடியும்.
உத்தர பிரதேசம்:இந்நிலையில், இந்த கட்டுப்பாட்டை விலக்குவது குறித்து, கரும்பு மற்றும் சர்க்கரை அதிகளவில் உற்பத்தியாகும், 12 மாநில அரசுகளின் கருத்தை தெரிவிக்கும்படி மத்திய அரசு, கேட்டுக் கொண்டது. பத்து மாநிலங்கள் கட்டுப்பாடு விலக்கல் குறித்து, தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளன. ஆனால், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் அவற்றின் கருத்தை தெரிவிக்க வில்லை என, தாமஸ் மேலும் குறிப்பிட்டார்.
உற்பத்தி:இந்நிலையில், நடப்பு பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) மறு மதிப்பீடு செய்துள்ளது. இது, முதல் மதிப்பீட்டை விட, அதிகமாகும்.கடந்த 2011-12ம் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதேசமயம், உள்நாட்டில், இதன் பயன்பாடு, 2.20 கோடி டன்னாக இருந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|