பதிவு செய்த நாள்
25 பிப்2013
00:54
மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சார வாகனங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.தேசிய மின் போக்குவரத்து திட்டத்தின் கீழ், வரும் 2020ம் ஆண்டிற்குள், இந்திய சாலைகளில், 60-70 லட்சம் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு:இதையடுத்து, மின்சார வாகனத் துறைக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் மாசற்ற மின்சார கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இத்தகைய செயல்பாடுகளுக்காக, அடுத்த எட்டு ஆண்டுகளில், 12,250 கோடி முதல் 13,850 கோடி ரூபாய் வரை முதலீடு மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக, மின் வாகன தேவையை அதிகரிப்பது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிக்க மானியம் வழங்குவது என, நான்கு அம்சங்களின் கீழ் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.அவற்றில் ஒன்றாக, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், பெட்ரோல் விற்பனை மையங்களில், மின்சார வாகனங்களின் மின்கலன்களை "சார்ஜ்' செய்யும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
தற்போது, பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,), பாரத் பெட்ரோலியம் (பீ.பி.,) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (எச்.பி.,) ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும், 42 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன.இவற்றில், பெட்ரோல், டீசல் ஆகியவையும், குறிப்பிட்ட நிலையங்களில் திரவ இயற்கை எரிவாயு (எல்.பி.ஜி.,), அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.,) ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையங்களில், மின் வாகனங்களுக்கு "சார்ஜ்' செய்யும் அடிப்படை வசதியை ஏற்படுத்துவதன் மூலம், இவ்வகை வாகனங்களை மக்கள் விரும்பி வாங்குவது அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சூரிய மின்சக்தி:இத்திட்டத்திற்கான முதலீடு குறித்து, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவு செய்யப்படும் என்றும், பெட்ரோல் நிலையங்களில், சூரிய மின்சக்தி மூலம் மின்சார கார்களை, "சார்ஜ்' செய்யும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளதாக, மத்திய கனரக தொழில் துறையை சேர்ந்த உயர்அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெட்ரோல் நிலையங்களில், சூரிய மின் சக்தி மூலம் மின் வாகனங்களை, "சார்ஜ்' செய்வதற்கான தகடுகள், 1-2 ஆண்டு களுக்குள் பொருத்தப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.இத்திட்டம் செயல்படத் துவங்கிய பின், தனியார் நிறுவனங்களுக்கும் மின் வாகனங்களை, "சார்ஜ்' செய்யும் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது. இதையடுத்து, தற்போது, ஆங்காங்கே பரவலாக காணப்படும் பொது தொலைபேசி மையங்கள் போன்று, மின் வாகனங்களை "சார்ஜ்' செய்யும் மையங்களும் தோன்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் செலவுஎரிபொருள் செலவைக் கணிசமாக குறைக்கும் வகையில் மாசற்ற சுற்றுச் சூழலுக்கு, உகந்த மின் வாகனங்களை வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களை போல், மின் வாகனங்களை "சார்ஜ்' செய்ய போதிய மையங்கள் இல்லாதது தான், இவ்வகை வாகனங்களின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளது.மத்திய அரசு விரைந்து எடுத்து வரும் நடவடிக்கைகளால், வரும் ஆண்டுகளில், மின் வாகன உற்பத்தியும், விற்பனையும் பெருகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|