பதிவு செய்த நாள்
25 பிப்2013
10:36
கோவை:கோவை பூமார்க்கெட்டுக்கு தினசரி 30 - 40 டன் பூக்கள் வருகின்றன; ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடக்கிறது. கோவை பூமார்க்கெட்டுக்கு தினமும் காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து மல்லி மற்றும் முல்லைப்பூக்களும், மதுரை அருகே உள்ள நிலக்கோட்டை மற்றும் இதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து சம்பங்கி, செவ்வந்தி, மருகு, மரிக்கொழுந்து, அரளி மற்றும் துளசி கொண்டு வரப்படுகிறது. துடியலூர் சுற்றுப்பகுதியில் இருந்து பட்டுப்பூ, சாதா ரோஜா, வாடாமல்லியும், ஒசூர், ராயக்கோட்டை பகுதியிலிருந்து ரோஜா, செண்டுமல்லி, செவ்வந்தியும், ஏற்றுமதி ரோஜாக்களும் கொண்டு வரப்படுகின்றன. மலர் மாலை தொடுப்பதற்காக, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியிலிருந்து சவுக்கு மரத்தின் இலைகள் என மொத்தம் 30 முதல் 40 டன் அளவில், அனைத்து வகையான பூக்களும் கோவை பூமார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 25 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடக்கிறது.பூமார்க்கெட்டில் தினமும் காலை 6.00 மணிக்கு, பூக்களின் வரத்து நிலவரம், ஏதாவது முக்கிய நாட்கள் இருப்பின் அதற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் கிலோ கணக்கிலேயே விலை நிர்ணயிக்கப்படும். மருது, மரிக்கொழுந்து, துளசி ஆகியவை கட்டாகவும், கூடை கணக்கிலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அன்றைய வரத்தை பொறுத்து, காலை மற்றும் மதியம் என இருவேளையும் விலை மாறுபடுகிறது.
கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார், செயலாளர் அன்சாரி, பொருளாளர் ஐயப்பன் ஆகியோர் கூறியதாவது :பூ மார்க்கெட்டில் 170 கடைகள் உள்ளன. சமீபத்தில் மாநகராட்சி கட்டி கொடுத்த 45 புதிய கடைகளும் கடந்த ஒரு மாத்துக்கும் மேலாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. சுமார் 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர்; இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் உள்ளனர். மார்க்கெட்டுக்கு தினமும் வரும் 30-40 டன் பூக்களில், 5 - 10 டன் வரை கேரளாவுக்கு அனுப்பப் படுகிறது; இது சீசனை பொறுத்து மாறும். இத்தொழிலில், நிலையான விலையை நிர்ணயிக்க முடியாது. கோவை நகரம் விரிவடைந்து வருவதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாலும், கேரளாவுக்கு விரைவில் பூக்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், பாலக்காடு ரோடு, குனியமுத்தூர் பகுதியில், தனி குடோன் அமைக்கப்பட்டுள்ளது; கேரளாவுக்கு உடனுக்குடன் பூக்களை அனுப்பும் பணி துவக்கப்பட்டுள்ளது. இத்துடன், தினமும் காலை 'பேக்கிங்' செய்யப்படும் பூக்கள், மினி லாரி மற்றும் வேன்கள் மூலம் கேரள மாநிலம், கொச்சின் விமான நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. முறையான சோதனைக்குப் பின், விமானத்தில் மும்பை, துபாய், அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. மும்பைக்கு தினமும், துபாய்க்கு வாரத்தில் ஐந்து நாட்களும், அமெரிக்கா, நியூயார்க் நகரத்துக்கு வாரம் ஒரு முறையும் பூக்கள் அனுப்பப்படுகின்றன; கோவை விமான நிலையத்தில் இதற்கான வசதி இல்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|