பதிவு செய்த நாள்
28 பிப்2013
00:24
மும்பை:நடப்பு பருவத்தில், நாட்டின் ஆமணக்கு வித்துக்கள் உற்பத்தி, 11.43 லட்சம் டன்னாக சரிவடையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்றுமதி:இது, கடந்த பருவத்தில், 15.76 லட்சம் டன்னாக இருந்தது என, இந்திய எண்ணெய் உற்பத்தி யாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகளவில், ஆமணக்கு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச சந்தையில், ஆமணக்கு வித்துக்களுக்கான மொத்த தேவையில், இந்தியாவின் பங்களிப்பு, 90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதில், குஜராத் மாநிலத்தின், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பங்களிப்பு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நம்நாடு தற்போது, ஆண்டுக்கு, 4,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, ஆமணக்கு வித்துக்கள், எண்ணெய் மற்றும் அதன் உப பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
உள்நாட்டில், ஆமணக்கு வித்துக்கள் உற்பத்தியில், குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.ஆமணக்கு வித்துக்கள் உற்பத்தியாகும் முக்கிய மாநிலங்களில், காலம் தவறிய பருவ மழையால், இதன் சாகுபடி பரப்பளவு குறைந்துஉள்ளது.
குஜராத்:குறிப்பாக, குஜராத் மாநிலத்தில், நடப்பாண்டில், இதன் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 4 சதவீதம் குறைந்து, 6.66 லட்சம் ஹெக்டேராக சரிவடைந்துள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்த அளவில், நடப்பு பருவத்தில், ஆமணக்கு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, 32 சதவீதம் சரிவடைந்து, 8.06 லட்சம் டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களில்,கடந்த ஆண்டு, ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக, 1,706 கிலோ ஆமணக்கு வித்துக்கள் உற்பத்தியானது. ஆனால், நடப்பு ஆண்டில் இது, 29 சதவீதம் சரிவடைந்து, 1,210 கிலோவாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|