பதிவு செய்த நாள்
02 மார்2013
00:22
எர்ணாகுளம்:தமிழகத்தில் இருந்து, கலப்பட தேங்காய் எண்ணெய் வரத்து அதிகரித்துள்ளதாக எழுந்த புகார் குறித்து, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.அண்மைக்காலமாக, தமிழகம் மற்றும் கேரளாவில் கொப்பரை விலை சரிவடைந்து வருகிறது.
கொப்பரை:கடந்த வாரம், கேரளாவில், ஒரு கிலோ தேங்காய் எண்ணெய் விலை, 65 ரூபாயில் இருந்து, 63 ரூபாயா கவும், இது, தமிழகத்தில், 63 ரூபாயில் இருந்து, 60 ரூபாய் என்ற அளவிலும் குறைந்துள்ளது.அது போன்று, கேரளாவில், ஒரு குவிண்டால் கொப்பரை விலை, 4,700 ரூபாயில் இருந்து, 4,500 ரூபாயாகவும், இது, தமிழகத்தில், 4,600 ரூபாயில் இருந்து, 4,350 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
கொப்பரை பருவம் துவங்கியுள்ளதால், விரைவில் அதன் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக காசர்கோடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் கொப்பரை வரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே, தொழில் துறையின் மந்தநிலையால், கொப்பரைக்கான தேவை குறைந்து, அதன் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், புதிய வரத்து காரணமாக, அதன் விலை மேலும் சரிவடையும் என, தெரிகிறது.
பாமாயில்:இந்நிலையில், தமிழகத்தில் இருந்து விற்பனைக்கு வரும், தேங்காய் எண்ணெயில், எண்ணெய் பனை பருப்பில் இருந்து தயாரிக்கப்படும், பனை எண்ணெயை கலப்படம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட தேங்காய் எண்ணெய் போன்று காணப்பட்டாலும், அதை விட, பனை எண்ணெயின் தரமும், விலை யும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் ஒரு கிலோ பாமாயில் விலை, 52 ரூபாயாகவும், பனை எண்ணெய் விலை, 53 ரூபாயாகவும் இருந்தது.
இதனால், தமிழகத்தை சேர்ந்த சில வியாபாரிகள், தேங்காய் எண்ணெயுடன், பனை எண்ணெயை கலந்து, கேரளா விற்கு அனுப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.இதையடுத்து, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில், கலப்பட தேங்காய் எண்ணெய் குறித்து விசாரிக்க, தனி குழுக்களை, கேரள உணவு பாதுகாப்பு ஆணையம் அமைத்துள்ளது.
இக்குழுக்கள், தமிழக தேங்காய் எண்ணெய் வகைகளின் மாதிரிகளை சேகரித்து, அவற்றை ஆய்வு செய்ய, தேசிய ஆய்வக அமைப்பிற்கு (என்.ஏ.பீ. டி.சி.எல்.,) அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
ஆய்வறிக்கை:தமிழகத்தில் இருந்து நாள்தோறும் கேரளாவிற்கு, 30-40 எண்ணெய் டாங்கர்களில், தேங்காய் எண்ணெய் அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஆய்வறிக்கையின் முடிவை பொறுத்து, தமிழகத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் தருவிக்கப்படும் என, கேரள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|