பதிவு செய்த நாள்
08 மார்2013
00:10
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஜனவரி வரையிலான, 10 மாத காலத்தில், உள்நாட்டில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனங்களின், பல்வேறு திட்டங்களில் இருந்து, 32 லட்சம் முதலீட்டாளர்கள் விலகியுள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்து உள்ளது.
முதலீடு:மொத்த பரஸ்பர நிதி திட்டங்களில், பங்குச் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து தான், அதிக அளவில், முதலீட்டாளர்கள் வெளியேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.கடந்த, 2011-12ம் நிதியாண்டின், ஜனவரி மாதம் வரையிலுமாக, 4.64 கோடி முதலீட்டாளர்கள் பல்வேறு, பரஸ்பர நிதி நிறுவனங்களின் முதலீட்டு திட்டங்களில், முதலீடு செய்திருந்தனர்.
இந்த எண்ணிக்கை, நடப்பு ஆண்டு, ஜனவரி மாத இறுதியில், 4.32 கோடியாக சரிவடைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு காலத்தில், 32 லட்சம் முதலீட்டாளர்கள் அல்லது பரஸ்பர நிதி கணக்குகள் சரிவுஅடைந்துள்ளன."செபி' அமைப்பின் புள்ளி விவரத்தின் படி, தற்போது, நாட்டில், 44 பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களின், பல்வேறு திட்டங்களில், ஒரு முதலீட்டாளர், ஒரு திட்டம் அல்லது பல்வேறு திட்டங்களில், முதலீடு மேற்கொண்டுள்ளனர்.
கணக்கீட்டு காலத்தில், மிக அதிகபட்சமாக, பங்குச் சார்ந்த முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை, 3.76 கோடியில் இருந்து, 3.36 கோடியாக சரிவடைந்துள்ளது. பரஸ்பர நிதி நிறுவனங்களின் மொத்த முதலீட்டுத் திட்டங்களில், பங்குச் சார்ந்த முதலீட்டு திட்டங்களின் பங்களிப்பு, 70 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் எட்டு மாதங்களில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில் இருந்து தான், மிக அதிக அளவில் தொகை வெளியேறியுள்ளது. குறிப்பாக, சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், 2,501 கோடி ரூபாய், விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
"சென்செக்ஸ்':இதுகுறித்து, சந்தை பங்கேற்பாளர் ஒருவர்கூறியதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்', 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி, லாப நோக்கம் கருதி, பல பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.
இதேபோன்று, ஜனவரி வரையிலான காலத்தில், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டு திட்டங்களில் இருந்தும், 1.11 லட்சம் முதலீட்டாளர்கள் வெளியேறி உள்ளனர். இதையடுத்து, இத்திட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 26.07 லட்சமாக உள்ளது. இருப்பினும், கணக்கீட்டு காலத்தில்,வருவாய் மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டு திட்டங்களில், 8.11 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்து உள்ளனர். இதையடுத்து, இத்திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 60.61 லட்சமாக உயர்ந்துள்ளது.
புள்ளிவிவரம்:பரஸ்பர நிதி நிறுவனங்களின், "எக்சேஞ்ச் டிரேடடு பண்ட்ஸ்' எனப்படும், திட்டங்களில், புதிதாக, 1.09 லட்சம் முதலீட்டாளர்கள் இணைந்துள்ளனர். இதன் பிறகு, இத்திட்டங்களில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, 7.32 லட்சமாக உயர்ந்துள்ளது என, "செபி' அமைப்பின், புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|