பதிவு செய்த நாள்
11 மார்2013
00:25
புதுடில்லி:எண்ணை மாற்றாமல், அலைபேசி சேவை நிறுவனங்களை மாற்றக் கோரி வந்த, 1.40 கோடி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) விசாரணை மேற்கொண்டு வருகிறது. அலைபேசி எண்ணை மாற்றாமல், வேறொரு அலைபேசி சேவை நிறுவனத்தின் தொலை தொடர்பு வசதியை பெறும் திட்டம் (எம்.என்.பி.,), கடந்த, 2011ம் ஆண்டு ஜன., 20ம் தேதி, நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அபராதம்:இதையடுத்து, தற்போது வரை, 8.50 கோடி பேர், எம்.என்.பி., திட்டத்தின் கீழ், ஒரே எண்ணில், வேறொரு நிறுவனத்தின் அலைபேசி சேவைக்காக விண்ணப்பித்து உள்ளனர். இதில், 1.40 கோடி விண்ணப்பங்களை, அலைபேசி சேவை நிறுவனங்கள் நிராகரித்து உள்ளன. குறிப்பிட்ட காரணமின்றி, விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என, "டிராய்' உத்தரவிட்டு உள்ளது. இதை மீறினால், நிராகரிக்கப்படும் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும், நிறுவனங்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், "டிராய்' தெரிவித்துள்ளது.
ஆனால், இதையும் மீறி, பார்தி ஏர்டெல் நிறுவனம், மிக அதிகபட்சமாக, 37 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது.இரண்டாவது இடத்தில் வோடபோன் உள்ளது. இந்நிறுவனம், 27 லட்சம் பேரின், அலைபேசி சேவை மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை ஏற்க மறுத்துள்ளது. ஐடியா செலுலார் நிறுவனம், 21 லட்சம் பேரின் விண்ணப்பங்களை நிராகரித்து உள்ளது.
இது தொடர்பாக, ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இருந்த போதிலும், இதுவரை எந்த நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வில்லை. தற்போது, விதிமுறையை மீறிய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பான பணிகள் துவங்கியுள்ளன என, "டிராய்' அமைப்பைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதலிடம்:எம்.என்.பி., திட்டத்தின் கீழ், அதிக அளவிலான புதிய வாடிக்கையாளர்களை பெற்றதில், ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.இந்நிறுவனத்தின் அலைபேசி சேவைக்கு மாறக் கோரி, 2.38 கோடி பேர் விண்ணப்பித்து உள்ளனர். 1.84 கோடி பேர், இந் நிறுவனத்தின் அலைபேசி சேவையில் இருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். இது, வோடபோன் நிறுவனத்தில் முறையே, 2.37 கோடி மற்றும் 1.68 கோடியாக உள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலிசர்வீஸ் நிறுவனங்களில், எம்.என்.பி., திட்டத்தின் கீழ், அலை பேசி சேவையை பெறுவோரை விட, வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|