பதிவு செய்த நாள்
11 மார்2013
00:36
ஈரோடு: இந்திய உணவுக் கழகம், தமிழகத்தில் இருந்து குறைந்த அளவிற்கே நெல்லை கொள்முதல் செய்வதால், கூலி அடிப்படையில், நெல்லை அரிசியாக மாற்றும் பணியை மேற்கொண்டு வரும் தமிழகத்தை சேர்ந்த, 450 அரிசி ஆலைகள் வேலையின்றி மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகள்:தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல் படுகின்றன. புழக்கத்தில் உள்ள, 1.99 கோடி ரேஷன் கார்டுகளில், 1.86 கோடி கார்டுகளுக்கு, தமிழக அரசு இலவச அரிசி வழங்குகிறது.விலையில்லா அரிசி திட்டத்தில், மாதம் 20 கிலோவும், மத்திய அரசின் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில், ஏழை விவசாயிகளுக்கு, 35 கிலோவும் வழங்கப்படுகிறது.தமிழக சிறைகளில் உள்ள, 20 ஆயிரம் கைதிகளுக்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள், சத்துணவு திட்டம், அரசு காப்பகங்கள், முதியோர் காப்பகங்களில் வசிப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கவும், மானிய விலையில் அரிசி வழங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டம்:இந்திய உணவு கழகத்தின் முகவராக உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், டெல்டா மாவட்டத்தில் இருந்து, 12 லட்சம் டன்னும், பிற பகுதிகளில் இருந்து, 20 லட்சம் டன்னுக்கு மேற்பட்ட நெல்லையும் கொள்முதல் செய்தது.மாநிலம் முழுவதுமாக அரசு அங்கீகாரம் பெற்ற, 450 அரிசி ஆலைகளுக்கு இந்த நெல் வழங்கப்பட்டு, அரிசியாக மாற்றி, பொது வினியோக திட்டத்துக்கும், பிற பயன்பாட்டுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அரிசி ஆலைகளுக்கு குவிண்டால் ஒன்றுக்கு, 200 ரூபாய் கூலியாக வழங்குவதால், நேரடியாகவும், மறை முகமாகவும், 1 லட்சம் குடும்பத்தினர் வேலைவாய்ப்பை பெற்றனர்.நடப்பாண்டு வறட்சியால் டெல்டா மாவட்டங் களில் நெல் உற்பத்தி, நான்கில் ஒரு பங்காக குறைந்தது. டெல்டா பகுதியில் அறுவடை துவங்கிய நிலையில், வியாபாரிகள் கூடுதல் விலைக்கு, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
கொள்முதல்:பொது வினியோக திட்டத்துக்காக, தமிழக அரசு நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் நீங்கலாக, வடமாநிலங்களில், 1.50 கோடி டன் நெல்லை,இந்திய உணவு கழகம் வாங்கி, ஆங்காங்கு அரிசியாக மாற்றி கொள்முதல் செய்துள்ளது.தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே நெல் கொள்முதல் செய்துள்ளதால், அரசை நம்பியிருந்த, 450 அரிசி ஆலைகள் வேலையின்றி மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், 450 நவீன மற்றும் சாதாரண அரிசி ஆலைகள், டி.என்.சி.சி.,க்கு அரிசி உற்பத்தி செய்து வழங்குகின்றன. டெல்டா விவசாயிகளிடம் ஆண்டுதோறும், 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்கின்றன.இந்தாண்டு, வறட்சியால், 2 சதவீத நெல் மட்டுமே, அரசு கொள்முதல் செய்தது.
இந்நிலையில், பொது வினியோக திட்டம் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க, வட மாநிலங்களில், ஆலை களில் அரைத்த நிலையில், 1.50 கோடி டன் அரிசியை கொள்முதல் செய்து வழங்குகிறது.அரிசியாக கொள்முதல் செய்வதால், தமிழக அரசி ஆலைகள் வேலை இழந்துள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.தமிழக தேவைக்கு ஏற்ப, அரிசிக்கு பதில், நெல்லாக அனுப்பினால், ஆலைகளுக்கு வேலை கிடைக்கும்.பொதுமக்களுக்கும் தரமான புதிய அரிசி கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|