பதிவு செய்த நாள்
14 மார்2013
12:22
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில், "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கி கிளைகளில் லாக்கர்களை பயன்படுத்தும் பெண்களுக்காக, அழகு நிலைய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் முதன்மையான பொதுத்துறை வங்கி, "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா!' இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்காக, பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், தங்கள் வங்கிகளின், "லாக்கர்'களில், நகைகளை பாதுகாப்பாக வைக்கும் பெண்களுக்காக, "மினி அழகு நிலைய' சேவையையும் சமீபத்தில் துவக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் உள்ள, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின், 20 கிளைகளில், இந்த அழகு நிலைய சேவைகள் துவக்கப்பட்டுள்ளன.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல விரும்பும் பெண்கள், வங்கியில் உள்ள லாக்கரில் இருந்து, தங்களின் நகைகளை எடுக்க வரும் போது, லாக்கர் அறையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மினி அழகு நிலையத்தில், தங்களை அழகுபடுத்திக் கொள்ளலாம். அதற்கேற்றபடி, அந்த அழகு நிலையத்தில், ஒரு அலங்கார மேஜை, முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, எண்ணெய், சோப்பு, லிப்ஸ்டிக், கிரீம், பேஸ் வாஷ், பவுடர், ஐ லைனர் உட்பட, பல வகையான அழகு சாதனப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும். இதற்கென வாடிக்கையாளர்களிடம், கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இது குறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறியதாவது: வங்கியின் இந்த சேவை, மிகுந்த மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. சுப நிகழ்ச்சிகளில், கலந்து கொள்ள செல்லும் போது, வங்கியிலேயே எங்களை அழகுபடுத்திக் கொள்வதால், கவலையின்றி சென்று வர முடிகிறது. நிகழ்ச்சி முடிந்ததும், நேராக வங்கிக்கு சென்று நகையை வைத்து விடுவதால், திருட்டு பயமின்றி, மகிழ்ச்சியாக உள்ளோம். இவ்வகை சேவையால், வங்கிகளில், லாக்கர்களை பயன்படுத்தும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அனைத்து வங்கிகளும் இந்த சேவையை தொடங்கினால், பெண்கள் மிகுந்த பயனடைவர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|