பதிவு செய்த நாள்
17 மார்2013
00:41
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல், பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் முக்கிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, 49.80 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் கையாண்ட சரக்கை (51.08 கோடி டன்) விட, 2.52 சதவீதம் குறைவாகும் என, இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டில், கோல்கட்டாவில் இரண்டு துறைமுகங்கள் உள்ளன. இவற்றையும் சேர்த்து, இந்தியாவில் மொத்தம், 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.
இவற்றுள், ஏழு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு சரிவடைந்தும், ஆறு துறைமுகங்கள் கையாண்ட சரக்கு, அதிகரித்தும் உள்ளன.வெளிநாட்டு வர்த்தகம்:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையால், நம் நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி, குறைந்துள்ளது. இருப்பினும், சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தை விட, 4.25 சதவீதம் அதிகரித்து, 1.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இருப்பினும், நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல், பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 4 சதவீதம் சரிவடைந்து, 14.62 லட்சம் கோடி ரூபாயாக குறைந்து உள்ளது.
கோல்கட்டா:இந்நிலையில், நாட்டின் இரும்புத் தாது வெட்டியெடுப்பதற்கு, ஒரு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஒரு சில ஆண்டுகளாக, இதன் ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. இதுவும், துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு குறைவிற்கு முக்கிய காரணம்.கோல்கட்டாவில், கோல்கட்டா டாக் சிஸ்டம் மற்றும் ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் என, இரண்டு துறைமுகங்கள் உள்ளன.
இவற்றுள், கோல்கட்டா டாக் சிஸ்டம், கையாண்ட சரக்கின் அளவு, நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாத காலத்தில், 4.46 சதவீதம் சரிவடைந்து, 1.11 கோடி டன்னிலிருந்து, 1.06 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
இதே போன்று, ஹால்டியா டாக் காம்ப்ளக்ஸ் துறைமுகம் கையாண்ட சரக்கு, 12.23 சதவீதம் குறைந்து, 2.86 கோடி டன்னிலிருந்து, 2.51 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு காலத்தில், மேற்கண்ட இரண்டு துறைமுகங்கள் கையாண்ட சரக்கின் அளவு, 10.05 சதவீதம் சரிவடைந்து, 3.97 கோடி டன்னிலிருந்து, 3.57 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.அதே சமயம், நடப்பு நிதியாண்டின், 11 மாத காலத்தில், பரதீப் துறைமுகம் கையாண்ட சரக்கு, 3.15 சதவீதம் அதிகரித்து, 4.98 கோடி டன்னிலிருந்து,5.14 கோடி டன்னாக வளர்ச்சி கண்டுள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 13.25 சதவீதம் சரிவடைந்து, 6.22 கோடி டன்னிலிருந்து, 5.39 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.எண்ணூர் துறைமுகம்:எண்ணூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 18.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.36 கோடி டன்னிலிருந்து, 1.62 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சென்னை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.15 சதவீதம் குறைந்து, 5.13 கோடி டன்னிலிருந்து, 4.87 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.தூத்துக்குடி துறைமுகம் கையாண்ட சரக்கு, 1.94 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2.51 கோடிடன்னிலிருந்து, 2.56 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
கொச்சி துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 0.03 சதவீதம் என்ற குறைந்த அளவில் சரிவடைந்து, 1.82 கோடி டன்னிலிருந்து, 1.81 கோடி டன்னாக குறைந்து உள்ளது.புதிய மங்களூர் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 12.93 சதவீதம் அதிகரித்து, 2.98 கோடி டன்னிலிருந்து, 3.36 கோடி டன்னாக வளர்ச்சி கண்டு உள்ளது.மர்மகோவா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 52.57 சதவீதம் என்ற அளவில் மிகவும் வீழ்ச்சி கண்டு, 3.52 கோடி டன்னிலிருந்து, 1.67 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.
மும்பை துறைமுகம்:மும்பை துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 5.53 சதவீதம் உயர்ந்து, 5.02 கோடி டன்னிலிருந்து, 5.30 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அதேசமயம், ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 2.33 சதவீதம் குறைந்து, 6.02 கோடி டன்னிலிருந்து, 5.88 கோடி டன்னாக சரிவடைந்து உள்ளது.கண்ட்லா துறைமுகம் கையாண்ட சரக்கின் அளவு, 14.18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7.54 கோடி டன்னிலிருந்து, 8.60 கோடி டன்னாக உயர்ந்து உள்ளது என, துறைமுகங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|