பதிவு செய்த நாள்
27 மார்2013
01:31
மும்பை:கடந்த ஏழு வர்த்தக தினங்களுக்குப் பிறகு, செவ்வாய்கிழமையன்று, பங்கு வியாபாரம் சிறிது ஏற்றத்துடன் முடிவடைந்தது. சில்லரை முதலீட்டாளர்கள், ஓரளவு பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், 0.12 சதவீத உயர்வுடன் நிறைவடைந்தது.ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், நுகர்பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், எண்ணெய், எரிவாயு, பொறியியல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 23.11 புள்ளிகள் அதிகரித்து, 18,704.53 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,758.88 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,612.37 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், பார்தி ஏர்டெல், டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கெயில் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 7.75 புள்ளிகள் உயர்ந்து, 5,641.60 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,655.30 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,612.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
பங்கு சந்தைகளுக்கு இன்று விடுமுறை:ஹோலி பண்டிகையை முன்னிட்டு, இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அன்னியச் செலாவணி, தங்கம், வெள்ளி மற்றும் வேளாண் முன்பேர சந்தை களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|