பதிவு செய்த நாள்
27 மார்2013
01:38
நடப்பு 201213ம் நிதியாண்டின், முதல் 10 மாதங்களில், நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 1,01,504 கோடி ரூபாயை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலத்தில், 62,244 கோடி ரூபாயாக இருந்தது.ஆக, மதிப்பீட்டு காலத்தில், இதன் ஏற்றுமதி, 63 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) தெரிவித்துள்ளது.
வரவேற்பு:சர்வதேச பொருளாதார சுணக்க நிலையிலும், நம் நாட்டின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது. இது, உலகளவில், இதற்கான வரவேற்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, 1.25 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, அபெடாவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதிப்பீட்டு மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஒட்டு மொத்த உணவுப் பொருட்கள் ஏற்றுமதியில், உணவு தானியங்களின் பங்களிப்பு, 40 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. குறிப்பாக, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப் பட்ட காய்கறிகள், மாம்பழ கூழ், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி, மிக அதிகளவில் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான முதல் பத்து மாத காலத்தில், மலர்கள் ஏற்றுமதி, 638 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை (508 கோடி ரூபாய்) காட்டிலும், 25.52 சதவீதம் அதிகமாகும்.
காய்கறிகள்:இதே காலத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி, 7.04 சதவீதம் அதிகரித்து, 4,437 கோடியிலிருந்து, 4,749 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் ஏற்றுமதி, 11.99 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,062 கோடியிலிருந்து, 3,429 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
உணவு தானியங்கள்:மதிப்பீட்டு காலத்தில், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முட்டை, பால் உள்ளிட்ட பொருட் களின் ஏற்றுமதி, 31.35 சதவீதம் உயர்ந்து, 12,286 கோடியிலிருந்து, 16,137 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. உணவு தானியங்கள் ஏற்றுமதி, 73.77 சதவீதம் வளர்ச்சி கண்டு, 23,637 கோடியிலிருந்து, 41,075 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மேலும், பதப்படுத்தப்பட்ட இதர பொருட்கள் ஏற்றுமதியும், 93.71 சதவீதம் உயர்ந்து, 18,314 கோடியிலிருந்து, 35,476 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மத்திய வர்த்தக அமைச்சகம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபகாலமாக, குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்கு, இவற்றின் ஏற்றுமதியை அதிகரிக்க, விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் பயனாக, சென்ற 200910ம் நிதியாண்டில், 11,178 கோடியாக இருந்த, ஐரோப்பிய நாடுகளுக்கான உணவுப் பொருட்கள் ஏற்றுமதி, நான்கு ஆண்டுகளில், பத்து மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி:இந்தியாவிலிருந்து, அரிசி வகைகள், காபி, உலர்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், கோழி இறைச்சி, முட்டை ஆகியவை ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பாக, ஜெர்மனிக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அமெரிக்காவிற்கு, தானிய உணவுகள், கொத்தவரை, கோகோ பொருட்கள்,தேன் ஆகியவை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை தவிர, நாட்டின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், இதர ஆசிய நாடுகளின் சந்தைகளும் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|