பதிவு செய்த நாள்
28 மார்2013
03:11
மும்பை:பொருளாதார மந்தநிலை, எரி பொருள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இந்திய வாகன துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பயணிகள் கார், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தியை குறைத்துள்ளன. முதலீடுகளை, படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தையும் தள்ளி வைத்துள்ளன.
மாருதி சுசூகி :மாருதி சுசூகி நிறுவனம், அதன் கூர்கான் தொழிற்சாலையில் இரண்டு நாட்களும், மானேசர் தொழிற்சாலையில் ஒரு நாளும், தொழிலாளர்களுக்கு அறிவிக்கப் படாத விடுப்பு வழங்கியது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சந்தையின் தேவைக்கு ஏற்ப நிறுவனம், வாகன உற்பத்தியை மேற்கொள்வது வழக்கம். வாகனங் களுக்கான தேவை குறைந்தால், அதற்கேற்ப வாகன உற்பத்தியும் குறைக்கப்படும்' என்று தெரிவித்தார்.
மாருதி சுசூகி மட்டுமின்றி, இதர முன்னணி நிறுவனங்களும், வாகன விற்பனை குறைவால், உற்பத்தியை குறைத்துள்ளன.குறிப்பாக, டாட்டா மோட்டார்ஸ், டொயோட்டா, வோக்ஸ்வேகன், ஸ்கோடா, நிசான், ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு உள்ளிட்ட நிறுவனங்கள், அவற்றின் வாகன உற்பத்தியை குறைத்துக் கொண்டுள்ளன.
வட்டி விகிதம்:வாகன விற்பனை சரிவிற்கு, பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறை உற்பத்தி குறைந்துள்ளதும் முக்கிய காரணங்களாகும். மேலும், பெட்ரோல் விலை உயர்வு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு போன்றவற்றாலும், மக்கள் கார் வாங்குவதை தள்ளி வைத்துஉள்ளனர்.
இதனால், பயணிகள் கார், நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை குறைந்து, முகவர்களிடம் அவற்றின் தேக்கம் அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் 2016ம் ஆண்டில், அரசு நிர்ணயித்துள்ள, 14,500 கோடி டாலர் மதிப்பிலான, வாகன விற்பனை இலக்கை எட்டுவது கடினம். இதற்கு மேலும், 10 ஆண்டுகள் ஆகும் என, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.
பின்னடைவு:நாட்டில், வாகன விற்பனை, கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. சென்ற 2012ம் ஆண்டு, நவம்பரில், பயணிகள் கார் விற்பனை, முந்தைய 2011ம் ஆண்டின் இதே காலத்தை விட, மைனஸ் 12 சதவீதம் பின்னடைவை கண்டு, 1.90 லட்சமாக வீழ்ச்சி கண்டு உள்ளது.
இது, டிசம்பரில், மைனஸ் 9 சதவீதம் சரிவைகண்டு, 1.80 லட்சமாக குறைந்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், முறையே, மைனஸ் 7 (2.20 லட்சம் கார்கள்) மற்றும் மைனஸ் 15 சதவீதமாக (2.20 லட்சம்) இருந்தது.
வர்த்தக வாகனங்கள்:இது போன்று, நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை, சென்ற நவம்பரில் மைனஸ், 42 சதவீதம் பின்னடைவை கண்டு, 19,136 ஆக குறைந்துள்ளது.இது, டிசம்பரில், மைனஸ் 48 சதவீதம் சரிவைக் கண்டு,16,325 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், இவை முறையே, மைனஸ் 47 (20,716) மற்றும் மைனஸ் 48 (18,987) ஆக சரிவடைந்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் :துறையும் மந்தகதியில் உள்ளது. எனினும், மதிப்பீட்டு மாதங்களில், இத்துறையின் விற்பனை, ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.கடந்த ஆண்டு நவம்பரில், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, மைனஸ் 10 சதவீதம் சரிவடைந்து, 12.50 லட்சம் வாகனங்களாக குறைந்திருந்தது.
அதே சமயம், டிசம்பரில், விற்பனை 2 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13.10 லட்சமாக இருந்தது. நடப்பு 2013ம் ஆண்டு, ஜனவரி யில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 14 லட்சமாக உயர்ந்திருந்தது. ஆனால், சென்றபிப்ரவரி மாதம்,இத்துறையின் விற்பனை, மைனஸ் 1 சதவீதம் சரிவடைந்து, 13 லட்சமாக குறைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள்,அவற்றின் முதலீட்டு திட்டங்களை தள்ளி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உதிரிபாகங்கள்:இதனிடையே, இருசக்கர வாகனங்களுக்கு, உதிரிபாகங்கள் கிடைக்காமல் உரிமையாளர்கள் திண்டாடுவது அதிகரித்துள்ளது. நிறுவனங்கள், ஒரு பிராண்டு வாகன உற்பத்தியை, ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து விட்டது தான் இதற்கு காரணம் என, முகவர் ஒருவர் தெரிவித்தார்.வாகன உற்பத்தி நிறுத்தப்பட்டு, சந்தையில் அதன் வினியோகம் நிறுத்தப்படும்போது, அவ்வாகனத்திற்கான உதிரிபாகங்கள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டு விடுகிறது.உதாரணமாக, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கிறிஸ்டல், ஹோண் டாவின் எடர்னோ, ஹீரோவின் ஸ்டிரீட் மோட்டார் சைக்கிள்களுக்கு, உதிரிபாகங்கள் கிடைக்காமல் அவற்றின் உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|