பதிவு செய்த நாள்
28 மார்2013
23:07
சென்னை: "தமிழக அரசின் கடனும், அதற்கான வட்டியும், திரும்ப செலுத்தும் வகையில், மாநிலத்தின் நிதிநிலை வலுவாக உள்ளது' என, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.பட்ஜெட் பொது விவாதத்துக்கு பதில் அளித்து அவர் பேசியதாவது:
அனுமதி
மாநில அரசின் கடன் அளவை குறிப்பிட்டு, எம்.எல்.ஏ.,க்கள் பேசியுள்ளார்கள். அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், மாநிலத்தின் கடன் கட்டுப்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், கடன் பெற அனுமதிக்கும் தொகையை விட, குறைந்த அளவிலேயே, கடன் வாங்கப்படுகிறது.மாநில அரசு, நடப்பு 2012-13ம் ஆண்டில், 20,716 கோடி ரூபாய் கடன் வாங்கலாம் என, அனுமதிக்கப்பட்டது. ஆனால், 15,675 கோடி ரூபாய்க்கே கடன் வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட, மேற்கத்திய நாடுகள் கூட, கடன் பெற்றுத் தான் பல கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மத்திய அரசு கூட, கணிசமான அளவு கடன் பெற்றுத் தான், கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.அரசு வாங்கும் கடன், நீண்ட கால கட்டமைப்புகளுக்கு பயன்படுகிறதா, கடனை திரும்ப செலுத்தும் நிலையில், மாநில அரசு உள்ளதா என்பதைப் பொறுத்தே கடன் பெறுவது சரியா, தவறா என்று கூற முடியும். இந்த அடிப்படையில் தான், மாநில அரசுகள் வாங்கும் கடனை, மத்திய நிதிக்குழு நிர்ணயம் செய்கிறது.வரும், 2013-14ம் நிதி ஆண்டில், தமிழக அரசு வாங்கும் கடன் அளவை, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 25 சதவீதமாக, மத்திய நிதிக் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால், பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள, கடன் அளவு, 19.18 சதவீதம் தான்.
கடன் அளவு
கடனுக்கான வட்டி அதிகரிப்பதாக சுட்டிகாட்டுகின்றனர். மாநிலத்தில் உயர்ந்து வரும் உற்பத்தி, வரி வருவாய் அடிப்படையில், வாங்கப்படும் கடன் அளவும், அதற்கான வட்டியும், உயர்வதைத் தவிர்க்க முடியாது. கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், வட்டிச் சுமை, வருவாயில், 20.97 சதவீதமாக இருந்தது. இது வரும், 2013-14ம் நிதி ஆண்டில், 11.45 சதவீதமாக குறையும்.நாட்டில், குறைவான கடன் சுமை உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. எனவே, மாநிலத்தின் கடன் கட்டுக்குள்ளும், நிதிநிலை வலுவாகவும் உள்ளது. இவ்வாறு, நிதி அமைச்சர் பேசினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|