பதிவு செய்த நாள்
28 மார்2013
23:21
விளையாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரியை நீக்க வேண்டும் என, இத்துறை சார்ந்தவர்கள் மத்திய நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு சந்தையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, விளையாட்டு பொருட்கள் தயாரிப்பு துறையின் வளர்ச்சி,ஏற்ற, இறக்கமின்றி உள்ளது.
வரி விலக்குஇதை கருத்தில் கொண்டு, ஆயத்த ஆடைகளை போல், விளையாட்டு பொருட்களுக்கும், உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அண்மையில் தாக்கல் செய்த 2013-14ம் நிதியாண்டிற்கான, மத்திய பட்ஜெட்டில், ஆயத்த ஆடைகளுக்கு உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என, அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து, ஜலந்தரை சேர்ந்த யூனிவர்சல் ஸ்போர்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரான் சாதா கூறியதாவது:கடந்த 2011-12ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டில், விளையாட்டு பொருட்களுக்கு உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. அது முதல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்நாட்டு சந்தையில், விளையாட்டு பொருட்கள் துறையின் வளர்ச்சி, சமநிலையில் உள்ளது.
அதற்கு முன்பு, சிறுதொழில் என்ற முறையில், விளையாட்டு பொருட்களுக்கு, உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுஇருந்தது.
குடிசை தொழில்
ஆனால், 2011ம் ஆண்டு, மார்ச் 1ம் தேதி முதல், 130 பொருட்களுக்கு, 1 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்பட்டது. இது, 2012-13ம் நிதியாண்டில், 2 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் விளையாட்டு பொருட்களுக்கு மட்டுமே, உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது. ஏற்றுமதிக்கு கிடையாது.
இத்துறை மிகச் சிறியது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பிரிவில், 450 - 500 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், ஜலந்தர், மீரட் நகரங்களில் பதிவு செய்யப்படாத, 4,000 க்கும் மேற்பட்ட குடிசைத் தொழில்கள் இயங்கி வருகின்றன. மேலும், மீரட் மற்றும் ஜலந்தரில், 40 நிறுவனங்கள் மட்டுமே, ஆண்டுக்கு 1.50 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டுகின்றன.
இவை, விளையாட்டு பொருட்களுக்காக, ஆண்டுக்கு 18 - 20 கோடி ரூபாய் உற்பத்தி வரி செலுத்துகின்றன.பிற நிறுவனங்கள், 1.50 கோடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதலை கொண்டுள்ளதால், அவை, உற்பத்தி வரி விதிப்பின் கீழ் வரவில்லை. வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், ஆயத்த ஆடைகளுக்கான உற்பத்தி வரி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு மிகப் பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும். இதனுடன் ஒப்பிடும்போது, விளையாட்டு பொருட்களால் ஏற்படும் உற்பத்தி வரி இழப்பு, மிகவும் சொற்பமாகவே இருக்கும்.
பங்களிப்பு
அதனால், விளையாட்டு பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள உற்பத்தி வரியை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பிரான் சாதா தெரிவித்தார்.
இந்தியாவின் ஒட்டுமொத்த விளையாட்டு பொருட்கள் உற்பத்தியில், ஜலந்தர் மற்றும் மீரட் நகரங்களின் பங்களிப்பு, 85 - 90 சதவீதமாக உள்ளது.
இங்கு, கிரிக்கெட் மட்டை, பந்து, கால்பந்து, ஹாக்கி மட்டை, டென்னிஸ், பேட்மின்டன், ஸ்குவாஷ், ஷட்டில்காக் மட்டைகள், தோல் பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, மேற்கண்ட நகரங்களில் இருந்து, 700 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. உள்நாட்டில், 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
பாதிப்பு
உற்பத்தி வரி மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனங்களாலும், இந்திய விளையாட்டு பொருட்கள் துறை பாதிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள அதன் ரீபோக் கடைகளின் எண்ணிக்கையை, மூன்றில் ஒருபங்கு குறைக்க முடிவு செய்துள்ளது.
உலகளவில் விளையாட்டு பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது.
இதனால், பூமா, ஸ்லேஸெங்கர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களிடம், விளையாட்டு பொருட்களை தயாரித்து பெற்றுக் கொள்வதும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|