பதிவு செய்த நாள்
30 மார்2013
15:07
பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும், ரெவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தை, 2010ம் ஆண்டு மே மாதம், மஹிந்திரா நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதன் பிறகு, சிறந்த எலக்ட்ரிக் காரை உருவாக்க, 100 கோடி ரூபாயை முதலீடு செய்தது. பெங்களூருவில், ஆண்டுக்கு, 30 ஆயிரம் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு, தொழிற்சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சூழ்நிலையில், டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில், மார்ச்,18ம் தேதி, 'இ2ஓ' என்ற பெயரில், புதிய எலக்டரிக் காரை, மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இரண்டு கதவுகள் கொண்ட, இந்த காரில், ஒரே நேரத்தில், நான்கு பேர் பயணம் செய்ய முடியும். புதிய தலைமுறை லித்தியம் -ஐயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. 3 பேஸ் இன்டக்ஷன் எலக்டரிக் மோட்டாரும், இந்த காரில் உண்டு. ஒரு முறை சார்ஜ் செய்தால், இந்த காரில், 100 கி.மீ., தூரம் வரை பயணம் செய்யலாம். முழு சார்ஜ் செய்ய, ஐந்து மணி நேரமாகும். முழு ஆட்டோமேடிக் காரான 'இ2ஓ', நகர போக்குவரத்து மிகவும் சவுகரியமாக இருக்கும்.
இந்த காரில், ஜி.பி.எஸ்., நேவிகேஷன் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் உள்ளிட்ட வசதிகளும் உண்டு.
டில்லியில், எலக்டரிக் காருக்கு, மாநில அரசு, 20 சதவீத மானியம் வழங்குகிறது. எனவே, டில்லியில், இந்த காரின் ஆன் ரோடு விலை 5.96 லட்சம். இது, 'டிஓ' என்ற வேரியன்ட்டுக்கான விலை. 'டி1' வேரியன்ட்டின் விலை 6.24 லட்சம் ரூபாய். வீடு, அலுவலகம் என, எங்கு வேண்டுமானாலும், எலக்டரிக் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இன்னும் சில வாரங்களில், மும்பை, பெங்களூரு, புனே, அஹமதாபாத், ஹைதராபாத், சண்டிகர் மற்றும் கொச்சி நகரங்களில், 'இ2ஓ' எலக்ட்ரிக் கார், அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய, புதிய மற்றும் மாற்ற தக்கவல்ல எரிசக்தி துறை அமைச்சகம் சார்பில், இதற்கு முன், எலக்டரிக் கார்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை, மானியம் அளித்து வந்தது. இந்த திட்டம், 2012ம் ஆண்டு, மார்ச், 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் - ஐயன் பேட்டரிகளுக்கு மட்டும், வரிச்சலுகை அளிக்கப்படுகிறது. முன்பு போல, மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|