பதிவு செய்த நாள்
03 ஏப்2013
00:05
சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவின் காபி ஏற்றுமதி, 10.3 சதவீதம் சரிவடைந்து, 3,08,916 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 3,44,356 டன்னாக இருந்தது.
அமெரிக்கா:பொருளாதார மந்த நிலையால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் காபி பயன்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாகவே, இந்தியாவின் காபி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது.சென்ற நிதியாண்டில், காபி ஏற்றுமதி, மதிப்பின் அடிப்படையில், 2.5 சதவீதம் சரிவடைந்து, 4,715 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய 2011-12ம் நிதியாண்டில், 4,837 கோடி ரூபாயாக இருந்தது.
அதே சமயம், ஏற்றுமதி செய்யப்படும் ஒரு டன் காபியின் விலை, 8.6 சதவீதம் அதிகரித்து, 1,52,623 ரூபாயாக உயர்ந்துள்ளது.தெற்கு ஐரோப்பிய நாடுகளில், காபியின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகள், மலிவு விலையில் காபியை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளன.
இதனால், இந்திய காபிக்கான தேவை குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், காபி ஏற்றுமதி, 5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதை விட, அதிக அளவு காபி ஏற்றுமதி குறைந்துள்ளதுஎன, இந்திய காபி ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர், ரமேஷ் ராஜா தெரிவித்தார்.
சர்வதேச சந்தையில், கடந்த 2011-12ம் நிதியாண்டில், "அரபிகா' காபி விலை 25 -26 சதவீதம் குறைந்திருந்தது. இதனால், ஏராளமான விவசாயிகள், இவ்வகை காபி விற்பனையை குறைத்துக் கொண்டனர். இதன் காரணமாக, இதன் ஏற்றுமதி, சென்ற நிதியாண்டில் குறைந்துள்ளது என, ரமேஷ் ராஜா மேலும் கூறினார்.இதனிடையே, ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால், முன்பேர சந்தையில், இந்திய "அரபிகா' காபியின் விலை, கடந்த வாரம் சரிவை கண்டது.
பிரேசில்:இத்துடன், பிரேசிலின் காபி ஏற்றுமதி அதிகரித்து, அதன் விலை மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாகவும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய "அரபிகா' காபி மீதான முதலீட்டை குறைத்துக் கொண்டனர்.முன்பேர சந்தையில், வரும் மே மாத ஒப்பந்தத்தில், ஒரு பவுண்டு இந்திய "அரபிகா' காபியின் விலை, 1.4660 லிருந்து, 1.3660 டாலராக குறைந்துள்ளது என, இந்திய காபி வாரியத்தின் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம்:உலகில், காபி ஏற்றுமதியில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து, இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு, அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, "ரோபஸ்டா' வகை காபி, உடனடி பானங்கள் தயாரிப்பு மற்றும் "எஸ்பிரசோ' இயந்திரங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.தற்போது, விவசாயிகளை பொறுத்தவரை, "அரபிகா' காபியின் விலை, அதன் உற்பத்தி செலவை விட குறைவாகவே உள்ளது.
அதே சமயம், காபி உற்பத்திக்கு மிகவும் அத்தியாவசியமான உரங்கள், டீசல் ஆகியவற்றின் விலையும், விவசாய தொழிலாளர் களின் கூலியும் அதிகரித்துள்ளது. இதனால், காபிக்கான உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது.சென்ற நிதியாண்டில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், சர்வதேச சந்தையில் காபிக்கான தேவை உயர்ந்தது. இதனால், குறிப்பாக, "ரோபஸ்டா' காபி ஏற்றுமதி அதிகரித்தது. இல்லையென்றால், சென்ற நிதியாண்டில், நாட்டின் காபி ஏற்றுமதி மேலும் குறைந்திருக்கும்.
பங்களிப்பு:அதே சமயம், கடந்த இரண்டு மாதங்களாக, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகள், அதிக அளவில், "அரபிகா' காபியை ஏற்றுமதி செய்துள்ளதால், இவ்வகை காபி ஏற்றுமதியில், இந்தியாவின் பங்களிப்பு குறைந்துள்ளது என, ரமேஷ் ராஜா மேலும் தெரிவித்தார்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|