பதிவு செய்த நாள்
10 ஏப்2013
10:10
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், டாஸ்மாக் கடைகளில், பீர் விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஏழு நாட்களுக்கு தேவையான, பீர் இருப்பு, கடைகளில் வைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 6,850 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில், 15க்கும் மேற்பட்ட பீர் வகைகள் விற்கப்படுகின்றன. பீர் விலை, ரகத்திற்கு ஏற்றாவாறு, 80 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை, அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கடந்த, 2011-12ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 2012-13ம் நிதியாண்டில், பீர் விற்பனை, 60 சதவீதம் அதிகரித்தது. நடப்பாண்டில், இதன் விற்பனையை மேலும் அதிகரிக்க, டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. எனவே, கடைகளுக்கு, விஸ்கி, பிராந்தியை காட்டிலும், கூடுதலாக, பீர் சப்ளையை செய்து வருகிறது. தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், "குடி'மகன்கள் அதிக அளவில், பீர் குடிக்கத் துவங்கியுள்ளளனர். இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து, டாஸ்மாக் கடைகளிலும், பீர் விற்பனை அதிகரித்துள்ளது. பீர் தட்டுப்பாடு ஏற்பட்டு "குடி'மகன்கள் அல்லல்படுவதை தவிர்க்க, கடைகளில், ஏழு நாள் விற்பனைக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு கடையில், நாளென்றுக்கு சராசரியாக, 20-30 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை, தற்போது, 50-75 பெட்டிகளாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மாதந்தோறும், பீர் விற்பனை சராசரியாக, 23-25 லட்சம் பெட்டிகளாக இருக்கும். சில "குடி'மகன்கள், மதுபானத்துக்கு பதிலாக, பீர் வாங்கி குடிப்பதால், விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு ஏப்ரல், மே மாதங்களில், விற்பனை, 40 லட்சம் பெட்டிகளை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|