பதிவு செய்த நாள்
20 ஏப்2013
00:12
திருப்பூர்:விலை குறைவாக இருப்பதால், ஆந்திரா சிமென்டுக்கு, தமிழகத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால், வழக்கத்தை விட, தமிழக சிமென்ட் விற்பனை, 30 சதவீதம் குறைந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, சேலம் சங்ககிரி, ஆலங்குளம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிகளவில் சிமென்ட் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழக சிமென்ட் மூட்டை விலை, நாளுக்கு நாள் உயர்ந்து, தற்போது, 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 320 ரூபாயாக உள்ளது.
அதனால், தமிழக கட்டுமான பொறியாளர்கள், ஆந்திரா மாநில சிமென்டுகளை வாங்கத் துவங்கிஉள்ளனர். சில்லரை விற்பனை கடைகள் பலவற்றில் கூட, ஆந்திரா சிமென்டுகள் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன.திருப்பூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க செயலர் சிவன் பாலசுப்ரமணியம் கூறியதாவது:தமிழகத்தில் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, "சிண்டிகேட்' அமைத்துக் கொண்டு, சிமென்ட் விலையை உயர்த்தி வருகின்றனர்.
எனவே, ஆந்திராவில் இருந்து லாரி வாடகை, ஆள் கூலி கொடுத்து, ஒரு லாரி சிமென்ட் கொண்டு வந்தால், அவர்கள் மூட்டைக்கு, 270 முதல் 285 ரூபாய் மட்டுமே கேட்கின்றனர். மூட்டைக்கு, 30 ரூபாய் குறைவாக உள்ளதால், ஆந்திரா சிமென்டுகளை வாங்க துவங்கியுள்ளனர். இதனால், தமிழக சிமென்ட் விற்பனை சராசரியாக, 30 சதவீதம் பாதித்துள்ளது. இவ்வாறு பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|