பதிவு செய்த நாள்
21 ஏப்2013
00:25
புதுடில்லி:நாட்டின் தொலைத் தொடர்பு (அலைபேசி+தொலைபேசி) வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, சென்ற பிப்ரவரி மாதத்தில், 89.20 கோடியாக குறைந்துள்ளது. இது, கடந்த ஜனவரியில், 89.31 கோடியாக இருந்தது.ஆக, கணக்கீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த அளவில், நாட்டின் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 0.13 சதவீதம் குறைந்து உள்ளது.நடவடிக்கை பயன்பாட்டில் இல்லாத அலைபேசி எண்களை, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீக்கி வரும் நடவடிக்கையை அடுத்து, சென்ற 2012ம் ஆண்டு ஜூலை முதல், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்து வருவதாக, தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்து உள்ளது.
இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பாண்டு ஜனவரியில், 86.26 கோடியாக இருந்த அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, பிப்ரவரி மாதத்தில், 86.17 கோடியாக குறைந்துள்ளது. ஆக, கணக்கீட்டு மாதத்தில், அலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 0.11 சதவீதம் குறைந்து உள்ளது.குறிப்பாக, யூனிநார் நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 20.81 சதவீதம் சரிவடைந்து, 4.01 கோடியிலிருந்து, 3.17 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், ஐடியா செல்லுலார் நிறுவனம், 28.90 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டு உள்ளது. இதே போன்று, பார்தி ஏர்டெல் நிறுவனமும், 24.28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து கொண்டுள்ளது.
வோடபோன்:இது தவிர, வோடபோன் (21.86 லட்சம்), ரிலையன்ஸ் (16.38 லட்சம்) மற்றும் பீ.எஸ்.என்.எல். (4.29 லட்சம்) உள்ளிட்ட நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவிற்கு, புதிய வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டுள்ளன.
அதேசமயம், ஏர்செல், டாட்டா டெலி சர்வீஸ், சிஸ்டமா சியாம் டெலி சர்வீஸ், வீடியோகான், எச்.எப்.சி.எல்., எம்.டி.என்.எல்., லூப் மொபைல் ஆகிய நிறுவனங்களின், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிவடைந்து உள்ளது என, "டிராய்' தெரிவித்துள்ளது.
அலைபேசி எண் மாறாமல், சேவை நிறுவனங்களை மட்டும் மாற்றிக் கொள்ளும் (எம்.என்.பி) திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 25 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதுவரையிலுமாக, 8.68 கோடி பேர், புதிய சேவை நிறுவனங்களுக்கு, இத்திட்டத்தின் கீழ் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|