பதிவு செய்த நாள்
21 ஏப்2013
00:29
புதுடில்லி:சர்வதேச அளவில், தங்கம் விலை மேலும் சரியும் என, அமெரிக்காவை சேர்ந்த தரகு நிறுவனமான மெரில் லின்ச் எச்சரித்துள்ளது.இந்நிறுவனத்தின்,உலோக திட்டப் பிரிவு ஆய்வாளர் மைக்கேல் விட்மர் கூறியதாவது:லண்டன் உலோக சந்தையில், கடந்த இரண்டு மாதங்களில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 300 டாலர் வரை சரிவடைந்து உள்ளது.
சைப்ரஸ் நாடு:கடந்த 12 ஆண்டுகளாக உயர்ந்து வந்த தங்கம், தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது. இந்நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சைப்ரஸ் நாடு, அதன் வசம் உள்ள தங்கத்தை, விற்பனை செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 150 டாலர் குறைந்து, 1,200 டாலராக சரிவடையும்.இதனால், வரும் 2014ம் ஆண்டு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 2,000 டாலரை எட்டும் என்று அறிவித்த இலக்கை, நிறுவனம் திரும்ப பெற்றுக் கொள்கிறது.
மேலும், தங்கத்தின் விலை உயரும் என்ற நிலைப்பாட்டை, ஏற்றத் தாழ்வற்ற நிலைக்கு நிறுவனம் மாற்றியுள்ளது. இவ்வாறு, விட்மர் தெரிவித்தார்.தங்கம் குறித்த மதிப்பீட்டை, மெரில் லின்ச், மாற்றிக் கொண்டு உள்ள நிலையில், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் மட்டும், தங்கத்தின் போக்கை துல்லியமாக மதிப்பீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் சர்வதேச விளைபொருள் ஆய்வு பிரிவின் தலைவர், ஜெப்ரி கர்ரி, கடந்த 10ம் தேதி, தங்கத்தை விற்பனை செய்யுமாறு, வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுத்தார்.இதற்கடுத்த இரு வர்த்தக தினங்களில், அதாவது, ஏப்ரல் 15ம் தேதிக்குள், லண்டன் முன்பேர சந்தையில், தங்கத்தின் விலை, 13 சதவீதம் சரிவடைந்தது. இது, கடந்த, 33 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும். ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,200 டாலரை விட குறைய வாய்ப்புள்ளது. தற்போது, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,250 - 1,350 டாலராக உள்ளது.
இது தற்காலிக நிலைதான். தங்கம் விலை, உடனடியாக, பழைய நிலையை எட்ட முடியாது.
அதனால், வரும் 2014ம் ஆண்டு, ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,270 டாலர் என்ற அளவிலேயே இருக்கும் என, ஜெப்ரி தெரிவித்து உள்ளார்.முதலீடு:அதேசமயம், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் சர்வதேச சந்தை பொருள் ஆய்வு பிரிவின் பகுப்பாய்வாளர் ரூபாலி சர்க்கார் கூறுகையில், "நடப்பாண்டில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,400 -1,450 டாலராக இருக்கும் என்று தெரிவித்தார்.
"தற்போது தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்த்து, நிலைமையை உன்னிப்பாக கவனித்து வாருங்கள்' என, யு.பி.எஸ் வங்கி தெரிவித்துள்ளது.தங்கம் விலை குறைவால், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்து உள்ளது. இந்திய இல்லங்களில், தற்போது, 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் நிலவரப்படி, இந்த தங்கத்தின் மதிப்பு, 66.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 52.30 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
தங்க காசுகள்:இந்நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்துள்ளதையடுத்து, இந்தியாவில், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில், தங்க காசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் கவுரவ தலைவர் சுரேஷ் ஹூண்டியா தெரிவித்தார்.
ஒரு சில வர்த்தகர்கள், தங்க காசுகளை கூடுதலாக, 200 ரூபாய் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தங்க இறக்குமதிக்கு கட்டுப்பாடு மற்றும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால், தங்கத்தை உடனடியாக இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது.மேலும், ஒரு சில வங்கிகளிடம், தங்க காசு கையிருப்பும் குறைந்து உள்ளது. இதுவும், தங்க காசு பற்றாக்குறைக்கு காரணம் என, கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|