பதிவு செய்த நாள்
22 ஏப்2013
01:32
வாஷிங்டன்:அயல்நாட்டில் பணிபுரிவோர், தாயகத்தில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவதில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என, உலக வங்கி தெரிவித்து உள்ளது.கடந்த, 2012ம் ஆண்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு, 6,900 கோடி டாலர் அளவிலான தொகையை அனுப்பி உள்ளனர்.பாகிஸ்தான்:வெளிநாடு வாழ்வோர், அதிக அளவிலான தொகையை, தாயகத்திற்கு அனுப்பியது குறித்த பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம் மற்றும் லெபனான் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.
சென்ற ஆண்டில், வெளிநாடு வாழ் சீனர்கள், சீனாவிற்கு, 6,000 கோடி டாலரை அனுப்பியுள்ளனர். அடுத்த இடங்களில், பிலிப்பைன்ஸ் (2,400 கோடி டாலர்), மெக்சிகோ (2,300 கோடி டாலர்), நைஜீரியா மற்றும் எகிப்து (தலா, 2,100 கோடி டாலர்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.சென்ற ஆண்டில், வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 5.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 40,100 கோடி டாலராக உயர்ந்துள்ளது.வளர்ச்சி:இது, அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரியாக, 8.8 சதவீத வளர்ச்சி கண்டு, வரும், 2015ம் ஆண்டில், 51,500 கோடி டாலராக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.சென்ற ஆண்டு, வெளிநாடுகளில் வாழும் தெற்காசியர்கள், தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை, 12.8 சதவீதம் அதிகரித்து, 10,900 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இது, கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக தலா, 13.8 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து பெறும் தொகை, குறிப்பிடத்தக்க பங்களிப்பை கொண்டு உள்ளது.இது, தஜிகிஸ்தான் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 47 சதவீதமாக உள்ளது. அடுத்த இடங்களில், லைபீரியா (31 சதவீதம்), கிர்கிஸ்தான்
(29 சதவீதம்), லெசோதோ (27 சதவீதம்), மால்டோவா (23 சதவீதம்), நேபாளம் (22 சதவீதம்), சமோ (21 சதவீதம்) ஆகியவை உள்ளன.கடந்த, 2000ம் ஆண்டு முதல், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து, வளரும் நாடுகள் பெற்ற தொகை, நான்கு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து உள்ளது.வளைகுடா நாடுகள்:சென்ற ஆண்டு, உலக நாடுகள், வெளிநாடு வாழ் தாயகத்தினரிடம் இருந்து பெற்ற தொகை, 51,400 கோடி டாலராக உயர்ந்து உள்ளது. இது, கடந்த, 2000ம் ஆண்டு,13,200 கோடி டாலராக இருந்தது.எண்ணெய் வளம் மிக்க, வளைகுடா நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த சாதாரண தொழிலாளிகள் அதிக அளவில் உள்ளனர். அதுபோன்று, இந்தியாவைச் சேர்ந்த பல்துறை வல்லுனர்கள், அமெரிக்கா மற்றும் உயர் வருவாய் உள்ள நாடுகளில் உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் வலுவான பொருளாதார வளர்ச்சி காரணமாக, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், அவற்றின் வெளிநாடு வாழ் மண்ணின் மைந்தர்கள் மூலம் பெறும் தொகை அதிகரித்து வருகிறது.வேலைவாய்ப்பு:இது, வரும், 2015ம் ஆண்டு, 14 ஆயிரம் கோடி டாலரை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில், ஓராண்டில், 100 கோடி பேர், அதாவது, ஏழு பேரில் ஒருவர், வேலைவாய்ப்பு, மேம்பட்ட வாழ்க்கை சூழலை நாடி, வேறு நாட்டிற்கு செல்கின்றனர்.இவ்வாறு செல்வோர், சம்பாதிக்கும் பணத்தை தாய் நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு வரும் தொகை, அவர்களின் குடும்பங்களுக்கு மட்டுமின்றி, நாட்டின் கல்வி, பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சிக்கும், உதவுகிறது என, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|