பதிவு செய்த நாள்
25 ஏப்2013
00:57
புதுடில்லி:அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பாகவே, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,) அமல்படுத்தப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான, 80 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதற்கான மசோதா மற்றும் அரசியல் சாசன சட்ட திருத்த முன்வரைவு அறிக்கையை தயாரிக்குமாறு, அதிகாரமிக்க அமைச்சரவை குழு, உத்தரவிட்டுள்ளது.
இக்குழு, வரைவு அறிக்கைக்கு, ஒப்புதல் அளித்து, பார்லிமென்டில் மசோதா நிறைவேறினால், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிய, இன்னும் 13மாதங்கள் உள்ளன. அதற்குள், சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வர, 70 சதவீத வாய்ப்பு உள்ளது.
ஜி.எஸ்.டி., நிலம் கையகப்படுத்தல் சட்டம், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீடு போன்ற சீர்திருத்தங்களை அமல்படுத்த, ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.,வும் ஒருமித்த கருத்துடன், இணைந்து செயல்பட வேண்டும்.இந்தியாவிற்கு, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டக் கூடிய தகுதி உள்ளது. அந்த இலக்கை அடையவில்லை என்றால், நாம் சரியாக செயல்பட வில்லை என்றுதான் பொருள். அதே சமயம், வேலை வாய்ப்புகளை உருவாக்காமல், பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. இவ்வாறு, நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|