பதிவு செய்த நாள்
25 ஏப்2013
01:01
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவடைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 900 டன்னை தாண்டும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
சென்ற 2012-13ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 850 - 870 டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், வரலாறு காணாத வகையில், 6,200 கோடி டாலராக உயர்ந்து உள்ளது.இது, சென்ற 2012-13ம் நிதியாண்டில், 9 சதவீதம் சரிவடைந்து, 5,600 கோடி டாலராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
தேவை:ஒட்டு மொத்த அளவில், தங்கம் விலை சரிவடைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டில், மதிப்பின் அடிப்படையிலான தங்கம் இறக்குமதி, 20 சதவீதம் குறைந்து, 4,500 கோடி டாலராக வீழ்ச்சி காணும் என, தெரிகிறது.அதே சமயம், தங்கம் விலை சரிவால், உள்நாட்டில் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. இது குறித்து, மும்பை தங்கம் வெள்ளி வியாபாரிகள் சங்க தலைவர் மொகித் காம்போஜ் கூறும்போது, " நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தங்கம் இறக்குமதி செய்வது, 950 - 1,000 டன் என்ற அளவில் அதிகரிக்கும்' என்று கூறினார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல், தங்கம் விலையும், அதற்கேற்ப தங்கம் இறக்குமதியும், அதிகரித்து வந்துள்ளது."ஆனால், அண்மைக்காலமாக தங்கம் விலை குறைந்துள்ளதால் அதற்கான தேவை, மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது' என,நோமுரா நிறுவனத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனரான சோனல் வர்மா தெரிவித்தார்.
நவரத்தினங்கள் ஏற்றுமதி:தங்கம் விலை, தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் பட்சத்தில், வரும் நாட்களில் அதற்கான தேவை பெருமளவு அதிகரிக்கும்' என,சோனல் மேலும் கூறினார்.தங்க ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில் அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தெரிவித்து உள்ளது. சென்ற 2012-13ம் நிதியாண்டில், தங்க நகைகள் மற்றும் நவரத்தினக் கற்களின் ஏற்றுமதி, 11 சதவீதம் குறைந்து உள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், தங்க நகைகள் மற்றும் நவரத்தினங்கள் பிரிவு, மூன்றாவது இடத்தில் உள்ளது.வரும் ஆண்டுகளில், இத்துறையின் ஏற்றுமதி, சிறப்பாக இருக்கும் என, பிரதமரின் ஆலோசனை குழு தெரிவித்து உள்ளது.
பொருளாதார மந்தநிலை:நடப்பு 2013-14ம் நிதியாண்டில், ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி, 12 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மதிப்பின் அடிப்படையில், 4,500 கோடி டாலரை தாண்டும் என, இக்குழு தெரிவித்துள்ளது.உலக நாடுகள் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக, ஐரோப்பா தவிர்த்த, இதர சந்தைகளில், தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.
"இதனால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஆபரணங்கள் மற்றும் நவரத்தினங்கள் ஏற்றுமதி, 12 - 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது'என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பின் தலைவர் விபுல் ஷா தெரிவித்தார்.
உலக சந்தையில் விலை குறைகிறது :உள்நாட்டில் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில், அதற்கான தேவை குறைந்து உள்ளது. பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகள் குறைந்து வருகின்றன. குறிப்பாக, சர்வதேச முதலீட் டாளர்கள், கோல்டு இ.டி.எப்., பண்டுகளில் இருந்து, அதிக அளவில் கணக்கை முடித்து வெளியேறுகின்றனர்.இத்தகைய முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|